LATEST NEWS
பிசிசிஐக்கு பிளேயர் வேணாம்… பீகாரி தொழிலாளி தான் வேணுமா..?” வைபவ் சூரியவன்ஷி விவகாரத்தில் கொந்தளித்த ரசிகர்கள்..!!
புதுடெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்ற T20 தொடரின் போது, இளம் தொடக்க ஆட்டக்காரர் வைபவ் சூரியவன்ஷி வீரர்களுக்குத் தண்ணீர் வழங்கும் பணியைச் செய்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. சொந்த மண்ணில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் அவரை ஆடும் லெவனில் சேர்க்காமல், மைதானத்தில் தண்ணீர் தூக்கிச் செல்ல வைத்த பிசிசிஐ அமைப்பை இந்தியக் கிரிக்கெட் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். வைபவ் இன்னும் இந்திய அணியின் நீல நிற சீருடையில் சொந்த நாட்டில் அறிமுகமாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சமூக வலைதளங்களில் இந்த வீடியோவைப் பகிரும் ரசிகர்கள், “சூரியவன்ஷி இன்றைக்கும் தண்ணீர் தான் கொடுப்பார். பிசிசிஐக்கு ஒரு பீகாரி தொழிலாளி தான் தேவைப்படுகிறாரே தவிர, ஒரு வீரர் அல்ல…” என்றும், மற்ற மாநிலங்களும் மத்திய அரசும் பீகாருக்கு என்ன செய்கிறதோ, அதையே தான் பிசிசிஐயும் அதன் இடைத்தரகர்களும் வைபவ் சூரியவன்ஷிக்கு செய்கிறார்கள் என்றும் கொந்தளிப்புடன் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். மேலும் எல்லைக்கோடு அருகே நிதிஷ் குமார் ரெட்டிக்கு வைபவ் மிகவும் மரியாதையுடனும் பணிவுடனும் பாட்டிலைத் திறந்து தண்ணீர் கொடுக்கும் வீடியோவையும் சுட்டிக்காட்டி ரசிகர்கள் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.
இந்தியா ஏற்கனவே ஆப்கானிஸ்தானுக்கு எதிரான T20 தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி முன்னிலையில் உள்ளது. தொடரை வென்றுவிட்டதால், வியாழக்கிழமை அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறும் 3-வது மற்றும் கடைசி T20 போட்டியில் வைபவ் சூரியவன்ஷி ஆடும் லெவனில் சேர்க்கப்பட்டு விளையாட அதிக வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
