LATEST NEWS
நீதிபதி அவர்களே…! என் மீது முட்டை வீசுறாங்க… காரில் இருந்தபடியே உச்சநீதிமன்ற நீதிபதிக்கு வீடியோ மெசேஜ் அனுப்பிய எம்.பி மஹுவா மொய்த்ரா.. பரபரப்பு வீடியோ..!!
மேற்கு வங்கத்தில் உள்ள கிரிஷ்ணநகர் தொகுதியில் நடைபெற்ற அரசியல் கூட்டத்தில் பங்கேற்கச் சென்ற திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்பி மஹுவா மொய்த்ரா மீது பாஜகவினர் முட்டை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். நாடியா மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற இந்த நிகழ்வின் போது, அங்கு திரண்ட பாஜக தொண்டர்கள் அவருக்கு எதிராகக் கருப்புக் கொடி காட்டி “திரும்பிப் போ” என முழக்கமிட்டனர். அப்போது திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக தொண்டர்களிடையே ஏற்பட்ட கைகலப்பைத் தொடர்ந்து, தனது காரை நோக்கிச் சென்ற மஹுவா மொய்த்ரா மீது முட்டைகள் வீசப்பட்டன.
இந்தத் தாக்குதலுக்குப் பிறகு காரில் இருந்தபடியே வீடியோ ஒன்றை வெளியிட்ட மஹுவா மொய்த்ரா, முட்டை வீசப்பட்ட தனது கோலத்தைக் காட்டி, உச்சநீதிமன்ற நீதிபதி தீபங்கர் தத்தாவிற்கு பகடியான முறையில் ஒரு செய்தியை அனுப்பியுள்ளார். முன்னதாக தனக்கு பாதுகாப்பு கோரி அவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி தீபங்கர் தத்தா, “இந்தியாவின் சுதந்திரப் போராட்ட வீரர்கள் நாட்டுக்காகத் துப்பாக்கிக் குண்டுகளை எதிர்கொண்டனர்; இந்தச் சின்ன தாக்குதலுக்குப் பயந்து பாதுகாப்பு கோரி உச்சநீதிமன்றத்தை அணுகுவது சரியல்ல” என்று கிண்டலாகக் கூறியிருந்தார்.
அதைச் சுட்டிக்காட்டிப் பேசிய மஹுவா மொய்த்ரா, “நீதிபதி அவர்களே, உங்கள் அறிவுரைப்படியே நான் ஒரு சுதந்திரப் போராட்ட வீரரைப் போல இந்தத் தாக்குதலை எதிர்கொண்டேன்” என்று தனது எக்ஸ் (X) தளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார். மேலும், இத்தகைய தாக்குதல் நடக்கக்கூடும் என தனக்கு காவல்துறை முன்னரே தகவல் அளித்ததாகவும், இந்தச் சம்பவம் போலீசாரின் உதவியுடன்தான் நடந்துள்ளது என்றும் அவர் தனது வீடியோவில் குற்றம் சாட்டியுள்ளார்.
