LATEST NEWS
“ஆட்சியில் பங்கு கிடைச்சாச்சு… அடுத்து கோட்டை தான் குறி” திருமாவளவனுக்காக வன்னி அரசு போட்ட அனல் பறக்கும் ஸ்கெட்ச்..!!
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனைத் தமிழகத்தின் முதலமைச்சராக அமர வைக்கும் வரை தங்களது போராட்டம் தொடரும் என்று தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு தொண்டர்கள் மத்தியில் முழங்கியுள்ளார். ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த அம்மனூர் பகுதியில் நடைபெற்ற கட்சியின் பல்வேறு கள நிகழ்வுகளில் பங்கேற்க வந்த அவருக்கு, விசிக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அங்கு திரண்டிருந்த தொண்டர்கள் மத்தியில் உரையாற்றிய அவர், கட்சியின் எதிர்கால அரசியல் இலக்கு குறித்து இவ்வாறு திட்டவட்டமாகப் பேசினார்.
நிகழ்ச்சியில் பேசிய வன்னி அரசு, “தற்போது ஆட்சியை வெல்வோம் என்று எங்களது தலைவர் திருமாவளவன் கூறினார்; அதன்படியே இப்போது நாம் தவெக தலைமையிலான அரசில் அதிகாரப் பங்கீடு பெற்று ஆட்சிக்கு வந்துவிட்டோம்” என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார். அப்போது கூட்டத்தில் இருந்த தொண்டர் ஒருவர், “அடுத்ததாக நாம் முழுமையாக ஆட்சியைக் கைப்பற்றுவோம்” என்று குரல் எழுப்ப, அதனை வழிமொழிந்து பேசிய அமைச்சர், திருமாவளவனை முதல்வராக்கும் வரை தொடர்ந்து களத்தில் போராடப் போவதாக உறுதிபடத் தெரிவித்தார்.
அரசியல் கருத்துகளுக்கு மத்தியில் சமூகப் பிரச்சினைகள் குறித்தும் பேசிய அவர், சிதம்பரத்தில் விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பான நிகழ்வுகளின் போது, மாணவர்கள் சிலர் தங்களது காலணிகளைத் தலையில் சுமந்து செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டதாகத் தங்களுக்குப் புகார்கள் வந்துள்ளதாகக் குறிப்பிட்டார். இந்த மனிதநேயமற்ற செயல் குறித்துச் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவரிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளதாகவும், தாமே நேரடியாகச் சென்று இந்த விவகாரத்தில் நேரில் ஆய்வு நடத்தித் தவறு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வழிவகை செய்யப்படும் என்றும் உறுதியளித்தார்.
இறுதியாக, அண்மைக்கால அரசியல் நகர்வுகள் குறித்துப் பேசிய வன்னி அரசு, தேர்தல் தோல்வியின் வன்மத்தால் திமுகவின் முன்னாள் அமைச்சர்களும் நிர்வாகிகளும் தற்போது பொது மேடைகளில் ஏற்கும் படியாக இல்லாத சில தேவையற்ற கருத்துகளைப் பேசி வருவதாகக் கடுமையாக விமர்சித்தார். திமுகவில் தற்போது முறையான தலைமைத்துவம் இல்லாதது போன்ற தோற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், அதே நேரத்தில் இந்த விவகாரத்தில் கனிமொழி எம்பி பதிவிட்டுள்ள கருத்து வரவேற்கத்தக்கது என்றும் கூறினார். மேலும், திரையுலகப் பிரபலங்கள் விஜய் மற்றும் அஜித் ஆகியோரின் சந்திப்பு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், அஜித் விளையாட்டுத் துறையிலும் ஆர்வம் கொண்டிருப்பதால் இந்தச் சந்திப்பை அரசியலாகப் பார்க்கக் கூடாது என்றும், முதலமைச்சர் விஜய் நட்பின் அடிப்படையிலேயே அவரைச் சந்தித்து உற்சாகப்படுத்தினார் என்றும் விளக்கமளித்தார்.
