LATEST NEWS
“தோற்றாலும் பரவால்ல” அதை மட்டும் செய்யாதீங்க.. ஆஸ்திரேலியா பாணியை சுட்டிக்காட்டி இந்திய அணிக்கு யுவராஜ் விடுத்த அதிரடி எச்சரிக்கை..!!
2027 ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கு இன்னும் ஓராண்டு காலமே உள்ள நிலையில், இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தலைமையிலான அணி நிர்வாகத்திற்கு முன்னாள் நட்சத்திர வீரர் யுவராஜ் சிங் முக்கிய எச்சரிக்கையையும் ஆலோசனையையும் வழங்கியுள்ளார். Cricinfo ஊடகத்திற்கு அளித்த நேர்காணலில், இந்திய அணி கடந்த காலங்களில் ஐசிசி தொடர்களின் இறுதி கட்டத்தில் செய்த தவறுகளைச் சுட்டிக்காட்டிய அவர், உலகக் கோப்பையை வெல்வதற்கான ஒரு பிரத்யேக மாஸ்டர் பிளான் குறித்தும் விரிவாகப் பேசியுள்ளார்.
இந்திய அணியில் அடிக்கடி வீரர்கள் மாற்றப்படுவதைத் தவிர்த்து, இப்போதே 16 முதல் 20 வீரர்கள் கொண்ட ஒரு நிலையான முக்கிய அணியை இறுதி செய்ய வேண்டும் என்று யுவராஜ் சிங் வலியுறுத்தியுள்ளார். சமீபகாலமாக காயம் மற்றும் பணிச்சுமை காரணமாக அணியில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருவதைக் குறிப்பிட்ட அவர், “உலகக் கோப்பை நெருங்கும் நேரத்தில் அவசரகதியில் அணியில் பெரிய மாற்றங்களைச் செய்வதே முந்தைய தொடர்களில் இந்திய அணி கோப்பையைத் தவறவிட்டதற்குக் காரணமாக அமைந்தது. எனவே, தற்போதே தேர்வு செய்யப்படும் வீரர்களுக்குத் தொடர்ந்து வாய்ப்பளித்து, அவர்கள் தோற்றாலும் ஜெயித்தாலும் அணி நிர்வாகம் முழு ஆதரவை வழங்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.
தற்போது சர்வதேச அளவில் ஒருநாள் போட்டிகளை விட டி20 போட்டிகளே அதிக அளவில் நடத்தப்படுவதால், ஒருநாள் உலகக் கோப்பைக்கான திட்டமிடலில் கால அவகாசம் குறைவு என்பதை யுவராஜ் சுட்டிக்காட்டியுள்ளார். “குறைவான ஒருநாள் போட்டிகளே உள்ள சூழலில், உலகக் கோப்பை விளையாடப் போகும் அனைத்து வீரர்களுக்கும் போதிய அளவு போட்டிகளில் களமிறங்கும் வாய்ப்பை வழங்க வேண்டியது அணி நிர்வாகத்தின் கடமையாகும். அப்போதுதான் வீரர்களால் தங்களது இயல்பான ஆட்டத்திறனைப் புரிந்து கொண்டு உலகக் கோப்பை போன்ற பெரிய தொடருக்கு முழுமையாகத் தயாராக முடியும்” என்று அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
மேலும், பலமுறை உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணியின் வெற்றிகரமான உத்தியை கம்பீர் தலைமையிலான கூட்டணிக்கு உதாரணமாக யுவராஜ் சிங் முன்வைத்துள்ளார். ஆஸ்திரேலியாவிடம் தனி ஆளாக நின்று போட்டியை மாற்றும் பல ‘மேட்ச்-வின்னர்கள்’ இருப்பதே அவர்களின் பலம் என்று குறிப்பிட்ட அவர், நெருக்கடியான நேரங்களில் ஒட்டுமொத்த அணியும் இணைந்து செயல்படும் அதேபோன்ற மனநிலையை இந்திய வீரர்களும் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றார். தொடக்கத்திலேயே இறுதிப்போட்டி அல்லது கோப்பையை வெல்வது பற்றி யோசித்து அழுத்தத்தை ஏற்படுத்திக் கொள்ளாமல், படிப்படியாக முன்னேறி முதலில் அரையிறுதிக்குத் தகுதி பெறுவதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும், வீரர்கள் மீது நிர்வாகம் வைக்கும் முழு நம்பிக்கையே உலகக் கோப்பையை வெல்ல உதவும் என்றும் கௌதம் கம்பீர் & கோ-விற்கு யுவராஜ் சிங் அறிவுறுத்தியுள்ளார்.
