LATEST NEWS
கடவுளே காப்பாத்து..! “நடுவானில் பிரிந்து தொங்கிய விமானம்!” – போயிங் 737 மேற்கூரை கழன்று விழுந்ததால் பயணிகள் அலறித் துடித்த மரண பய வீடியோ…!!
ஈரானின் மஷ்ஹாத் நகரில் இருந்து கெர்மான்ஷா நோக்கிப் புறப்பட்ட செபெஹ்ரான் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான போயிங் 737 விமானம், நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது அதன் உட்புற மேற்கூரை பேனல்கள் திடீரென கழன்று விழுந்ததால் பயணிகள் அலறியடித்துக் கதறிய பயங்கரமான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த செவ்வாய்க்கிழமை மாலை 5:30 மணியளவில் இந்தத் திக் திக் சம்பவம் அரங்கேறியுள்ளது. விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே அதன் தரையிறங்கும் சக்கரத்தில் (Landing Gear) டயர் வெடித்ததாகவும், அதைத் தொடர்ந்து எஞ்சினிலும் கோளாறு ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
https://twitter.com/i/status/2099886815704432776
இந்த அடுத்தடுத்த தொழில்நுட்பக் கோளாறுகளால் ஒட்டுமொத்த விமானமும் நடுவானில் மிகக் கொடூரமாகக் குலுங்கத் தொடங்கியது. அந்த அதிரடி அதிர்வின் காரணமாக, பயணியர் அமர்ந்திருந்த பகுதியின் மேல் அமைக்கப்பட்டிருந்த கேபின் மேற்கூரை பேனல்கள் (Ceiling Panels) பெயர்ந்து அவர்கள் மீதே தொங்கத் தொடங்கின. விமானத்தின் உள்பாகங்கள் வெளியே தெரிந்த அந்தப் பயங்கரமான நிமிடங்களில், தங்களது உயிர் பிழைக்குமா என்ற அச்சத்தில் பயணிகள் இருக்கைகளைப் பலமாகப் பற்றிக்கொண்டும், குனிந்து மறைந்து கொண்டும் அலறி அழுது பிரார்த்தனை செய்யத் தொடங்கினர்.
விமானம் நடுவானில் சிதறுவது போலக் காட்சியளித்த இந்த நெருக்கடி நிலையிலும், விமானிகள் சாதுரியமாகச் செயல்பட்டு விமானத்தை மீண்டும் மஷ்ஹாத் விமான நிலையத்திற்கே கொண்டு வந்து அவசரக் காலமாகத் தரையிறக்கினர். அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் பயணிகள் மற்றும் ஊழியர்கள் என யாருக்கும் எந்தக் காயமும் ஏற்படவில்லை; அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். ஏறத்தாழ 30 ஆண்டுகள் பழமையான அந்த போயிங் விமானத்தில் ஏற்பட்ட இந்த விபத்து குறித்து ஈரானின் சிவில் விமான போக்குவரத்து அமைப்பு தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
