CINEMA
அந்த ஜாடியை திறக்கப்போவது யார்?” – “ஆண்ட்ரியாவோட லைஃப் டைம் படம் இதுதான்…!பல வருடங்களாக தள்ளிப்போகும் பிசாசு 2…தியேட்டருக்கு வருமா? வராதா? மிஷ்கினின் அதிரடி பதில்…!
இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், நடிகைஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘பிசாசு 2’ திரைப்படம், பல்வேறு காரணங்களால் பல ஆண்டுகளாக வெளியாகாமல் முடங்கிக் கிடக்கிறது. கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘பிசாசு’ படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ள இப்படத்தில், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி பேய் ஓட்டுபவராகச் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், டிஜிட்டல் உரிமம் மற்றும் பைனான்ஸ் பிரச்சினைகள் காரணமாக இதன் ரிலீஸ் தள்ளிப்போய்க்கொண்டே இருக்கிறது. இதனால் மிஷ்கின் மற்றும் ஆண்ட்ரியா பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் எல்லாம் ‘பிசாசு 2 எப்போது வரும்?’ என்ற கேள்வி தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தான் நடித்துள்ள ‘பரிமளா அண்ட் கோ’ திரைப்படத்தின் விளம்பரப் பணிகளுக்காக யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த இயக்குநர் மிஷ்கின், ‘பிசாசு 2’ படத்தின் தற்போதைய நிலை குறித்துத் தனது பாணியில் சுவாரசியமான விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். “ஒரு காலத்தில் பேய்களை ஜாடிக்குள் அடைத்து வைத்திருப்பதாகக் கதைகளில் கேள்விப்பட்டிருப்போம். அதுபோலத்தான் இப்போது ‘பிசாசு 2’ திரைப்படமும் ஒரு ஜாடிக்குள் அடைக்கப்பட்டு, யாராவது ஒருநாள் அந்த ஜாடியைத் திறக்க மாட்டார்களா என்று காத்துக்கொண்டிருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.
“அந்த ஜாடியைத் திறக்காமல் வைத்திருக்க வைத்திருக்க, அதற்குள் இருக்கும் பேய் இன்னும் சக்திவாய்ந்ததாக மாறிக் கொண்டே இருக்கிறது. ஒருநாள் அந்த ஜாடி திறக்கப்படும் போது, இந்தப் படம் திரையுலகில் ஒரு பெரிய பிரளயத்தை ஏற்படுத்தும்!” – இயக்குநர் மிஷ்கின்.
மேலும், இந்தப் படம் தாமதமாக வெளியானலும் தியேட்டர்களில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று மிஷ்கின் நம்பிக்கை தெரிவித்துள்ளார். குறிப்பாக, “இது நடிகை ஆண்ட்ரியாவின் திரை வாழ்க்கையிலேயே மிகச் சிறந்த படமாக (Life-time movie) இருக்கும்; அந்த அளவிற்கு அவர் இதில் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்” என்றும் அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார். மிஷ்கினின் இந்த அதிரடியான மற்றும் நம்பிக்கையான பேச்சு, ‘பிசாசு 2’ படத்திற்காக நீண்ட நாட்களாகக் காத்திருக்கும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை மீண்டும் பல மடங்கு தூண்டியுள்ளது.
