LATEST NEWS
காங்கிரஸ் அரசின் “இந்திரா கியாரண்டி”… ஜூன் 15-க்குள் தீர்வு…!அரசு கஜானாவுக்குள் விழும் மிகப்பெரிய ஓட்டை…! புதிய அரசின் விபரீத முடிவு…!கேரளாவை உலுக்கும் பேருந்து சர்ச்சை…!
தமிழகத்தின் ‘மகளிர் விடியல் பயணம்’ திட்டத்தை முன்னுதாரணமாகக் கொண்டு, கேரளாவில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள காங்கிரஸ் தலைமையிலான யு.டி.எஃப் (UDF) அரசு, தனது தேர்தல் வாக்குறுதியான “இந்திரா கியாரண்டி” திட்டத்தின் கீழ் பெண்களுக்கு இலவசப் பேருந்து பயணத் திட்டத்தை அறிவித்துள்ளது. ஜூன் 15 முதல் இந்தத் திட்டம் அமலுக்கு வரும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இது கேரளாவின் பொதுப்போக்குவரத்து கட்டமைப்பில் பெரும் சவால்களையும், அரசியல் சூறாவளியையும் உருவாக்கியுள்ளது. சமூக நலத்திட்டமாக இது முன்வைக்கப்பட்டாலும், களத்தில் நிலவும் எதார்த்த சூழல் இந்தத் திட்டத்தின் வெற்றியைப் பெரும் கேள்விக்குறியாக்கியுள்ளது.
தற்போது கேரள மாநில அரசுப் போக்குவரத்து கழகமான கே.எஸ்.ஆர்.டி.சி (KSRTC) சுமார் 4,000 பேருந்துகளை மட்டுமே இயக்கி வருகிறது. இதில் அதிர்ச்சியூட்டும் விஷயம் என்னவென்றால், மூன்றில் ஒரு பங்கு பேருந்துகள் 15 ஆண்டுகள் பழமையானவை ஆகும். கே.எஸ்.ஆர்.டி.சி-யின் தினசரி வருவாயில் சுமார் 4 கோடி ரூபாயைப் பெண் பயணிகளே ஈட்டித் தரும் சூழலில், இந்த இலவசத் திட்டத்தால் அரசுப் பேருந்துகளின் வருவாய் பெருமளவு சரியும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த பத்து ஆண்டுகளில் சுமார் 14 ஆயிரம் கோடி ரூபாய் அரசு மானியத்தைப் பெற்று, கடும் நிதி நெருக்கடியில் தள்ளாடி வரும் கே.எஸ்.ஆர்.டி.சி, இந்த புதிய அறிவிப்பால் அரசு கஜானாவை மேலும் அதிகமாகச் சார்ந்திருக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.
மறுபுறம், கேரள மாநில சாலை போக்குவரத்தைப் பொறுத்தமட்டில், அரசு பேருந்துகளை விட மூன்று மடங்கு அதிகமான பேருந்துகளைத் தனியார் நிறுவனங்களே இயக்கி வருகின்றன. இவ்வளவு பெரிய பொதுப்போக்குவரத்தைத் தாங்கிப் பிடிக்கும் தனியார் துறைக்கு அரசு எவ்வித நிதி உதவியும் வழங்குவதில்லை என்பதோடு, அதிகப்படியான வரிகள் மற்றும் அபராதங்கள் மூலமாக அவர்கள் ஏற்கனவே திணறி வருகின்றனர். புள்ளிவிவரங்களின்படி, தனியார் பேருந்துகளில் பயணிப்பவர்களில் சுமார் 60 சதவீதம் பேர் பெண்கள் ஆவர். இப்போது அரசுப் பேருந்துகளில் இலவசப் பயணம் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், பெண் பயணிகள் அனைவரும் கே.எஸ்.ஆர்.டி.சி-யை நாடத் தொடங்குவார்கள்; இதனால் தங்களின் வருவாய் பாதியாகக் குறையும் என்று தனியார் பேருந்து உரிமையாளர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
ஏற்கனவே எரிபொருள் விலை உயர்வால் நஷ்டத்தில் இயங்கி வரும் தனியார் பேருந்து சேவை, இந்த பாரபட்சமான அறிவிப்பால் முற்றிலுமாக முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ள நிலையில், ஜூன் 15-ம் தேதிக்குள் இதற்கான உரிய தீர்வை அரசு காண வேண்டும் என்று அவர்கள் கெடு விதித்துள்ளனர். தங்களின் கோரிக்கைகள் ஏற்கப்படாவிட்டால், பேருந்து சேவைகளை முற்றிலுமாக நிறுத்தும் போராட்டத்தை நடத்தப் போவதாக விடுத்துள்ள எச்சரிக்கை அரசுக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது. பொதுமக்களின் நலனுக்கும், தனியார் உரிமையாளர்களின் வாழ்வாதாரத்திற்கும் இடையே புதிய அரசு எப்படிச் சமநிலையை ஏற்படுத்தப் போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
