CINEMA
விஜய்யை அரியணையில் அமரவைத்த ‘வேலாயுதம்’ ரகசியம்…பெண்களும் குட்டி நண்பீஸ்களும் விஜய்யை நம்பியது ஏன்?…யாரும் எதிர்பாராத நேரத்தில் ஆலமரமாக வளர்ந்த விஜய்…’வேலாயுதம்’ திரைப்படம் தான் திருப்புமுனையா?…
திரைப்படங்கள் மூலமாகத் மக்கள் மனதில் இடம்பிடித்து, இன்று அரசியல் அரியணையில் அமர்ந்திருக்கும் விஜய்யின் வெற்றிக்குப் பின்னால் பெண்களும் குழந்தைகளும் பெரும் பலமாக விளங்குகிறார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. கமர்ஷியல் சினிமாப் பாதையில் தன்னை ஒரு சாதாரண மனிதனாகவும், பாசமுள்ள அண்ணனாகவும் காட்டி வந்த விஜய், 2011-ல் வெளியான ‘வேலாயுதம்’ திரைப்படத்தின் மூலமே ஒட்டுமொத்த சமூகத்தையும் காக்கும் ஒரு ‘சூப்பர் ஹீரோ’ இமேஜை எட்டினார். இயக்குநர் ராஜாவின் இயக்கத்தில் வெளியான இப்படம், ‘திருப்பாச்சி’ படத்தின் அண்ணன் – தங்கை பாசத்தின் அடுத்தகட்ட நீட்சியாக அமைந்து, விஜய்யை வெறும் குடும்ப நாயகனாக மட்டுமின்றி, மாநிலத்தைக் காக்கும் ரட்சகனாகவும் மக்கள் மத்தியில் ஆழமாக விதைத்தது.
இப்படத்தில் தங்கைக்காக எதையும் செய்யும் அண்ணனாக வாழ்ந்த விஜய், திரைக்குப் பின்னால் அரசியல் சமநிலையை சாதுரியமாகக் கையாண்டார். அண்ணன் சென்ட்டிமென்ட் ஒருபுறம் பெண்களைக் கவர, மறுபுறம் திரையில் கடத்தப்படும் பெண்களைக் காப்பாற்றும் காட்சிகளும், “அவனை அடிங்க அண்ணா” என்ற வசனங்களும் தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த இளம்பெண்களையும் அவரைத் தங்கள் சொந்த அண்ணனாகப் பார்க்க வைத்தன. “மக்களின் தலைவிதியையே மாற்றப்போகிறவன் நீ” என்ற படத்தின் வசனங்கள், 15 ஆண்டுகளுக்கு முன்பே அவருக்கான அரசியல் விதையைத் தூவின. 2010 முதலே பலரால் குறைத்து மதிப்பிடப்பட்ட விஜய், யாருக்கும் தெரியாமல் தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு ஆலமரமாக வளர்ந்து நின்றதை நடந்து முடிந்த தேர்தல் முடிவுகள் நிரூபித்துள்ளன.
திரையில் அவர் கட்டமைத்த ‘சமூகப் பாதுகாவலன்’ என்ற அந்த ‘வேலாயுதம்’ பிம்பமே, இன்று தரையில் அவரை ஆட்சிக் கட்டிலில் அமர வைத்து, தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் அவரது கொடியை உயரப் பறக்கச் செய்துள்ளது. தற்போதைய சூழலில் சட்டம்-ஒழுங்கு சவால்களும், பெண்களுக்கு எதிரான குற்றங்களும் அதிகரித்துள்ள நிலையில், திரையில் காட்டிய அதே சூப்பர் ஹீரோ பொறுப்பை நிஜ வாழ்விலும் மக்கள் அவரிடம் எதிர்பார்க்கிறார்கள். தன் மீது நம்பிக்கை வைத்துள்ள தங்கைகளுக்காகவும், குட்டி நண்பீஸ்களுக்காகவும் விஜய் தன் நிர்வாக ஆயுதத்தைக் கூராக்கி, திரையில் மட்டுமல்லாமல் தரையிலும் தான் ஒரு நிஜ ‘வேலாயுதம்’ என்பதை நிரூபிப்பார் என்பதே மக்களின் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.
