CINEMA
சினிமா ஒரு பந்தயமே இல்லை…அந்தப் புகழுக்கு நான் அடிமையாகிவிட்டேன்…”சொந்தப் பணத்தை முதலீடு செய்யும் சமந்தா… சுழற்சியை உடைக்க எடுத்த அதிரடி முடிவு… ‘ட்ரலலாலா’ பின்னணி என்ன?…
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படம் வரும் ஜூன் 19 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. கடந்த 2023-ல் வெளியான ‘குஷி’ படத்திற்குப் பிறகு, சுமார் மூன்று ஆண்டுகள் நீண்ட இடைவெளிக்கு பின் வெளியாகும் படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், கடந்த மூன்று ஆண்டு காலத் தனிப்பட்ட வாழ்க்கைப் பயணமும், ஓய்வும் தனக்குள் ஏற்படுத்திய ஆழமான மாற்றங்கள் குறித்தும், தனக்குக் கிடைத்த நட்சத்திர அந்தஸ்து தன் மீது செலுத்திய ஆதிக்கம் குறித்தும் சமந்தா மனம் திறந்து பேசியுள்ளார்.
பல்லாவரத்தைச் சேர்ந்த ஒரு சாதாரணப் பெண்ணான தனக்குக் கிடைத்த பிரம்மாண்ட புகழும் அங்கீகாரமும் ஆரம்பத்தில் அதிர்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது என்று சமந்தா குறிப்பிட்டுள்ளார். காலப்போக்கில் அந்த நட்சத்திர பிம்பம் மற்றும் தற்காலிக அங்கீகாரங்களுக்குத் தான் அடிமையாகிவிட்டதை அவர் ஒப்புக்கொண்டுள்ளார். தொடர் வெற்றிகளால் தன்னைச் சுற்றி உருவான மாய உலகத்தை நிஜமென நம்பி, மக்களின் எதிர்பார்ப்புகளுக்காக மட்டுமே ஓடியதாகவும், அந்தப் பந்தயத்தில் தனது தனிப்பட்ட திறமையையோ அல்லது வளர்ச்சி குறித்தோ சுயபரிசோதனை செய்யத் தவறிவிட்டதாகவும் அவர் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
தற்போது அந்தப் பந்தயங்களும், எல்லைக் கோடுகளும் வெறும் மாயத்தோற்றம் என்பதைப் புரிந்து கொண்டுள்ள சமந்தா, இனி தூய மனநிலையுடன் மட்டுமே கதைகளை அணுகப் போவதாகக் கூறியுள்ளார். சினிமா எப்போதும் தனது முதல் காதல் என்றும், அதன் போதை தன்னை மீண்டும் இழுத்து வந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதன் ஒரு பகுதியாக, சினிமாத்துறையில் பெண்களுக்கான அங்கீகாரத்தை உயர்த்தவும், பெண்களை மையமாகக் கொண்ட திரைக்கதைகளை ஆதரிக்கவும் ‘ட்ரலலாலா புரொடக்ஷன்ஸ்’ என்ற தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் பணத்தை முதலீடு செய்து, புதிய முன்னெடுப்புகளைத் தொடங்கப் போவதாகவும் சமந்தா உறுதியளித்துள்ளார்.
