CINEMA
தமிழ்நாட்டின் தற்போதைய அரசன்…வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்புவின் ‘அரசன்’…அடுத்த வாரம் வரப்போகும் அந்த நாள்…” – கோலிவுட் பிரபலங்கள் தற்போதே முதலமைச்சர் அலுவலகம் படையெடுப்பது ஏன்?…
தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய்யின் பிறந்தநாள் அடுத்த வாரம் கொண்டாடப்பட உள்ள நிலையில், சினிமா பிரபலங்கள் பலரும் அவரை நேரில் சந்தித்து வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே நடிகர் திலகம் பிரபுவின் குடும்பத்தினர், ஆர்ஜே பாலாஜி, நடிகைகள் சினேகா மற்றும் சிம்ரன் ஆகியோர் விஜய்யைச் சந்தித்த நிலையில், நேற்று நடிகர்கள் ஷாம், விஷால் மற்றும் சிம்பு உள்ளிட்டோர் சந்தித்த புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் தீயாய் பரவி வருகின்றன. அதேசமயம், முதலமைச்சர் விஜய் சினிமா பிரபலங்களை மட்டுமே தொடர்ந்து சந்தித்து வருகிறார் என்றும், தனக்கு வாக்களித்த பொதுமக்களைச் சந்திக்க அவருக்கு நேரமில்லையா என்கிற விமர்சனங்களும், அது தொடர்பான மீம்களும் சமூக வலைத்தளங்களில் எழத் தொடங்கியுள்ளன.
இந்தச் சந்திப்புகளில், தற்போது ‘அரசன்’ படத்தில் நடித்து வரும் நடிகர் சிம்பு, தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்துக் கட்டிப்பிடித்து வாழ்த்துப் பெற்ற புகைப்படங்கள் சிம்பு ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த தேர்தல் நாளின் போது கூட விஜய்யின் ‘டிரெஸ் கோடு’ பாணியிலேயே சிம்பு வந்து ஓட்டுப் போட்டதையும், டி.ராஜேந்தர் விஜய்க்கு ஆதரவாகப் பேசியதையும் ரசிகர்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர். இதற்கிடையே, இவர்களின் சந்திப்பை வைத்து நெட்டிசன் ஒருவர் உருவாக்கியுள்ள குபீர் மீம் ஒன்று வைரலாகி வருகிறது. அதில் விஜய் சிம்புவைப் பார்த்து, “துப்பாக்கியை (துப்பாக்கி 2 வாய்ப்பை) சிவகார்த்திகேயனுக்குக் கொடுத்துவிட்டேனே, உனக்கு என்ன வேண்டும்?” எனக் கேட்க, அதற்கு சிம்பு தனது விடிவி பாணியில் “ஜெஸ்ஸி சார்…” என்று கேட்பது போல் கலாய்த்துள்ளனர்.
மறுபுறம், வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் ‘அரசன்’ திரைப்படம் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த ஆண்டு தீபாவளி ரேஸில் சூர்யா, சிவகார்த்திகேயன் மற்றும் சிம்பு எனப் பல முன்னணி நடிகர்களின் படங்கள் நேரடியாக மோதிக்கொள்ளும் சூழல் உருவாகியுள்ளது. இவர்களுடன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ திரைப்படமும் தீபாவளி ரிலீஸைக் குறிவைக்குமா அல்லது தள்ளிப்போகுமா என்கிற எதிர்பார்ப்பும் கோலிவுட் வட்டாரத்தில் தற்போதே பலத்த விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.
