LATEST NEWS
டெல்லி டூ சென்னை… மேலிடச் செல்வாக்கை இறக்கும் ஜோதிமணி… புதிய தலைவர் ரேஸில் மாணிக்கம் தாகூர்… தீவிரமடையும் உள்கட்சி மோதல்… பரபரப்பு சம்பவம்…!!
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தனது பதவியை ராஜினாமா செய்யக் கடிதம் அளித்துள்ளதைத் தொடர்ந்து, அடுத்த தலைவர் யார் என்ற உள்கட்சிப் போட்டி சத்தியமூர்த்தி பவனில் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்தத் தலைவர் நாற்காலிக்கான ரேஸில் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தற்போதைய சூழலில் முன்னிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
சமீபத்திய சட்டசபைத் தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி மற்றும் அதிகாரப் பகிர்வு விவாதங்களில் தீவிரமாகச் செயல்பட்ட இவருக்கு, கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் மற்றும் ஒரு குறிப்பிட்ட பிரிவினரின் ஆதரவு சாதகமாக இருப்பதாகத் தெரிகிறது.
இருப்பினும், இவருக்குச் சவால் அளிக்கும் வகையில் முன்னாள் எம்பி செல்லக்குமார் மற்றும் கரூர் எம்பி ஜோதிமணி ஆகியோர் கடுமையான போட்டியை ஏற்படுத்தி வருகின்றனர். குறிப்பாக, காங்கிரஸ் மேலிடத் தலைவர்களான ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோரிடம் தனக்கு இருக்கும் தனிப்பட்ட நெருக்கத்தைப் பயன்படுத்தி, இப்பொறுப்பைக் கைப்பற்ற ஜோதிமணி டெல்லியில் தீவிரமாகக் காய் நகர்த்தி வருகிறார்.
வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலை மனதில் வைத்து, கோஷ்டி பூசல்கள் இன்றி கட்சியை வழிநடத்தக்கூடிய ஒரு துடிப்பான தலைவரை நியமிக்க மேலிடம் திட்டமிட்டுள்ள நிலையில், இந்த மூவரில் யாருக்குத் தலைவர் மகுடம் சூட்டப்படும் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் அதிகரித்துள்ளது.
