LATEST NEWS
இது தான் காரணமா..? வெளிவந்த கொலை ரகசியம்! காதலியை உயிரோடு எரித்த கொடூரம்…தாயுடன் வாலிபர் தற்கொலை…!!
கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகேயுள்ள உப்பாரப்பள்ளியைச் சேர்ந்த ராஜசேகர் மற்றும் அவரது தாய் மஞ்சுளா ஆகியோர் தண்டரை ஏரியில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலைக்கு முன்பாக, பக்கத்து வீட்டாருடன் உள்ள வழித்தடப் பிரச்சினை காரணமாகவே தாங்கள் உயிரை மாய்த்துக்கொள்வதாக ராஜசேகர் தனது நண்பர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் ஒரு கடிதத்தை அனுப்பியிருந்தார். இந்தத் தகவலின் அடிப்படையில் தேடுதல் வேட்டை நடத்திய காவல் துறையினர், இருவரின் உடல்களையும் ஏரியிலிருந்து மீட்டனர்.
உயிரிழந்த ராஜசேகரைத் தேடி கர்நாடக மாநில போலீசார் வந்த பிறகுதான் இந்த தற்கொலைக்குப் பின்னணியில் இருந்த அதிர்ச்சியூட்டும் உண்மை வெளிச்சத்திற்கு வந்தது. ராஜசேகர், பெங்களூருவில் பியூட்டி பார்லர் நடத்தி வந்த நளினி என்ற பெண்ணை பல ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், வேறு ஒரு பெண்ணுடன் ராஜசேகருக்கு திருமணம் நிச்சயமாகியிருந்ததால், தனக்குத் தடையாக இருந்த காதலி நளினியை கடந்த வாரம் அவர் தீவைத்து எரித்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார்.
இந்தக் கொலை வழக்கில் விசாரணைக்காக நேரில் ஆஜராகும்படி கர்நாடக மாநில ஹலகூர் போலீசார் ராஜசேகரைத் தொடர்புகொண்டு அழைத்துள்ளனர். காதலியைக் கொன்ற வழக்கில் போலீசாரிடம் தான் வசமாகச் சிக்கிக்கொண்டதை உணர்ந்த அவர், போலீஸ் நடவடிக்கைக்குப் பயந்து தனது தாயாருடன் சேர்ந்து தற்கொலை செய்துகொண்டது விசாரணையில் உறுதியானது. காவல்துறையைத் திசைதிருப்பவே, அண்டை வீட்டார் மீது பழிசுமத்தி அவர் போலியாக வாட்ஸ்அப் கடிதம் தயார் செய்து நாடகமாடியதும் தற்போது அம்பலமாகியுள்ளது.
