LATEST NEWS
சில நொடிகள் கவனக்குறைவு..! பறிபோன உயிர்… உத்தரப் பிரதேசத்தில் ஒரு வயது குழந்தை வாலிக்குள் மூழ்கி பலி..!!
உத்தரப் பிரதேச மாநிலம் முராதாபாத் மாவட்டத்திலுள்ள ஜெயந்திபூர் பகுதியில் நெஞ்சை உலுக்கும் சோகமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. குந்தர்கி பகுதியைச் சேர்ந்த நதீம் என்பவரின் ஒரு வயது பெண் குழந்தை ‘ஆயத்’, தனது தாயாருடன் சில நாட்களுக்கு முன்பு பாட்டி வீட்டிற்கு வந்திருந்தாள். ஞாயிற்றுக்கிழமை காலையில் வீட்டின் முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த அந்த பச்சிளம் குழந்தை, எதிர்பாராதவிதமாக வீட்டின் குளியலறைக்குச் சென்றுள்ளது.
அங்கு தண்ணீர் நிரப்பி வைக்கப்பட்டிருந்த ஒரு சிறிய வாலியின் அருகே விளையாடிய குழந்தை, நிலைதடுமாறி குப்புற வாலிக்குள் விழுந்துள்ளது. மிகச் சிறிய குழந்தையாக இருந்ததால், வாலிக்குள் இருந்து அவளால் தானாக வெளியே வரவோ அல்லது தப்பிக்கவோ முடியவில்லை. இதனால் மூச்சுத் திணறி சில நிமிடங்களிலேயே அந்த வாலிக்குள்ளேயே குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
சிறிது நேரம் கழித்துக் குழந்தையைக் காணாமல் தேடிய குடும்பத்தினர், குளியலறையில் வாலிக்குள் கிடந்த அவளைப் பார்த்து அதிர்ச்சியடைந்து உடனடியாக வெளியே எடுத்தனர். அவளைக் காப்பாற்றப் பல முயற்சிகள் செய்தும் பலனின்றிப் போனது. நான்கு குழந்தைகளில் மிக இளையவளான ஆயத்தின் இந்த திடீர் மரணம் அந்த குடும்பத்தையே நிலைகுலையச் செய்துள்ளது. குழந்தையின் உடல் அவளது சொந்த ஊரான குந்தர்கிக்குக் கொண்டு செல்லப்பட்டு, அங்குள்ள மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது. சில நொடிகள் ஏற்பட்ட கவனக்குறைவு ஒரு குடும்பத்தின் ஒட்டுமொத்த மகிழ்ச்சியையும் பறித்துச் சென்றுள்ளது.
