CINEMA
ரேஸ் ரேஸ்னு உயிரைப் பணயம் வைக்காதீங்க..! நீங்களாவது வாங்க..! அஜித்துக்கு மன்சூர் அலிகான் எழுதிய உருக்கமான கடிதம்..!!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார், அண்மைக்காலமாகத் தனக்குப் பிடித்தமான கார் பந்தயங்களில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். துபாய் போன்ற வெளிநாடுகளில் நடைபெறும் பந்தயங்களில் தனது சொந்த அணியுடன் அவர் பங்கேற்று வருகிறார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான ‘குட் பேட் அக்லி’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, அவர் சினிமாவுக்குச் சற்று இடைவெளி விட்டுவிட்டு, முழுமையாக கார் ரேஸிங் பக்கமே கவனம் செலுத்தி வருவதால், நடிகர் மன்சூர் அலிகான் அவருக்கு ஒரு உருக்கமான வேண்டுகோள் கடிதத்தை எழுதியுள்ளார்.
தமிழ் திரையுலகில் அஜித்தின் சமகாலப் போட்டியாளராக விளங்கிய நடிகர் விஜய், தற்போது அரசியலில் நுழைந்து தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார். இதனால் தமிழ் சினிமாவில் ஒரு பெரிய வெற்றிடம் உருவாகியுள்ளதை மன்சூர் அலிகான் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். இந்தச் சூழலில், அஜித் தொடர்ந்து கார் ரேஸ் என்று மிகவும் ஆபத்தான, உயிரைப் பணயம் வைக்கும் ஒரு விஷயத்தை தனது விருப்பமாகத் தேர்ந்தெடுத்துச் செயல்படுவதை மாற்றி, மீண்டும் சினிமாவுக்குத் திரும்ப வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
உங்களை அடையாளம் காட்டியதும், கோடிக்கணக்கான ரசிகர்களை உங்களுக்கு உருவாக்கியதும் சினிமாத்துறைதான் என்பதை நினைவூட்டியுள்ள மன்சூர் அலிகான், திரையுலகை நம்பி வாழும் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொள்ளுமாறு அஜித்திடம் கோரியுள்ளார். ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தவும், சுமார் 10 தயாரிப்பாளர்கள் இணைந்து தயாரிக்கும் ஒரு பெரிய லட்சியப் படத்தில் நடிக்க அஜித்குமார் இரு கரம் கூப்பி மீண்டும் திரைத்துறைக்கு வர வேண்டும் என்று தனது கடிதத்தில் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.
