CRIME
“உறவை தவறாக பயன்படுத்திய சித்தப்பா… 55 வயதில் 16 வயது சிறுமியுடன் திருமணம்… பின்னணியில் வெளிவந்த பகீர் தகவல்கள்”..!!
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் அடுத்த சிவதண்டலம் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர், கடந்த மாதம் 17-ஆம் தேதி திடீரென வீட்டிலிருந்து மாயமாகியுள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் கடம்பத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து தேடி வந்தனர். இந்நிலையில், சுமார் 19 நாட்களுக்குப் பிறகு அந்தச் சிறுமி பொன்னேரி அடுத்த மெதூர் பகுதியில் உள்ள ஒரு அரிசி ஆலையில் இருப்பதாக உறவினர்கள் மூலம் தகவல் கிடைத்துள்ளது. அங்கு விரைந்து சென்ற போலீசார், சிறுமியை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்ததுடன், அவருடன் இருந்த 55 வயதுடைய சித்தப்பா முறையிலான உறவினர் சங்கர் என்பவரைக் காவல் நிலையம் அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தினர்.
போலீசாரின் விசாரணையில் பல அதிர்ச்சியூட்டும் உண்மைகள் வெளியாகின. 55 வயதான சங்கருக்கு ஏற்கனவே திருமணமாகி பேரப்பிள்ளைகள் இருக்கும் நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சிறுமியின் வீட்டிலேயே தங்கியிருந்துள்ளார். சிறுமியின் பெற்றோர் வேலைக்குச் செல்லும்போது, மகளைப் பார்த்துக் கொள்ளுமாறு சங்கரிடம் பொறுப்பை ஒப்படைத்துள்ளனர். இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்ட சங்கர், சிறுமிக்கு ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். ஒருமுறை அவர் தவறாக நடந்துகொண்டதை உறவினர் ஒருவர் பார்த்து எச்சரித்ததால், பெற்றோர் சங்கரை அடித்து வீட்டை விட்டுத் துரத்தியுள்ளனர். இருந்தபோதிலும், தொடர்ந்து நோட்டமிட்டு வந்த சங்கர், கடந்த மாதம் அதிகாலை நேரத்தில் தூக்கக் கலக்கத்தில் இருந்த சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்றுள்ளார்.
அதன் பின்னர், பொன்னேரி அருகே உள்ள ஒரு கோவிலில் வைத்து அச்சிறுமியைச் சட்டவிரோதமாகத் திருமணம் செய்து கொண்ட சங்கர், அங்குள்ள அரிசி ஆலையில் தங்கி வேலை பார்த்து வந்தது தெரியவந்தது. இதன்பேரில் கடம்பத்தூர் போலீசார் சங்கரைக் கைது செய்து, மேல் நடவடிக்கைக்காகத் திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மைனர் சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடத்தி, கட்டாயத் திருமணம் செய்து பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக, முதியவர் சங்கர் மீது அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
