CRIME
உஷார் மக்களே..! பழைய 5 ரூபாய் நோட்டு இருந்தா ரூ.1 கோடியா…? ஃபேஸ்புக் விளம்பரத்தை நம்பி ரூ.1 லட்சம் கோவிந்தா..! எட்டாம் வகுப்பு படிச்ச செக்யூரிட்டி கார்டு விரித்த பிரம்மாண்ட வலையின் பின்னணி..!!
ஹரியானாவின் பரிதாபாத் பகுதியில், பழைய 5 ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்களை கோடி ரூபாய்க்கு வாங்கித் தருவதாகக் கூறி சைபர் மோசடி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் சிர்சா மாவட்டத்தைச் சேர்ந்த வினோத் என்ற பாதுகாப்பு ஊழியரை பல்லப்காட் சைபர் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள இவரது வங்கிக் கணக்கிற்கு மோசடி தொகையிலிருந்து ₹28,000 மாற்றப்பட்டதை அடுத்து இவர் சிக்கினார். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை, மேலும் விசாரணை நடத்துவதற்காக 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட செக்டார்-8 பகுதியைச் சேர்ந்த இளைஞர், ஃபேஸ்புக்கில் பழைய நோட்டுகள் மற்றும் நாணயங்களை வாங்குவதாக வெளியிடப்பட்ட விளம்பரத்தைப் பார்த்துள்ளார். அதில் குறிப்பிடப்பட்டிருந்த தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டபோது, தங்களை காயின் எக்ஸ்சேஞ்ச் நிறுவனத்தின் பிரதிநிதிகள் என அறிமுகப்படுத்திய மோசடி கும்பல், அவரிடம் உள்ள பழைய 5 ரூபாய் நோட்டிற்கு சுமார் 1 கோடி ரூபாய் தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளது. இதை நம்பிய அந்த இளைஞரிடம் வரி, பாதுகாப்பு கட்டணம் மற்றும் கஸ்டம்ஸ் கட்டணம் போன்ற பல்வேறு காரணங்களைச் சொல்லி ரூ.1,02,267 வரை பல வங்கிக் கணக்குகளுக்குப் பணமாகப் பறித்துள்ளனர்.
பணம் செலுத்திய பிறகு பழைய நோட்டிற்கான தொகையும் கிடைக்காமல், சரியான பதிலும் வராததால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த இளைஞர், பல்லப்காட் சைபர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் தொழில்நுட்ப ஆதாரங்கள் மற்றும் வங்கிப் பரிவர்த்தனைகளை ஆய்வு செய்து போலீசார் வினோதைக் கைது செய்தனர். சமூக வலைதளங்களில் பழைய நோட்டுகள் மற்றும் நாணயங்களை அதிக விலைக்கு வாங்குவதாக வரும் விளம்பரங்களை நம்பி பொதுமக்கள் பணத்தை இழக்க வேண்டாம் என்றும், தெரியாத நபர்களின் கணக்குகளுக்குப் பணம் அனுப்புவதற்கு முன் கவனமாக இருக்குமாறும் காவல் துறையினர் எச்சரித்துள்ளனர்.
