LATEST NEWS
“நானும் அரசுப் பள்ளி மாணவிதான்!”.. விமர்சனங்களுக்கு நறுக் பதிலடி கொடுத்த அமைச்சர்.. ட்ரெண்டாகும் அமைச்சர் கீர்த்தனாவின் எக்ஸ் பதிவு..!!
2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் சிவகாசி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தமிழகத்தின் தற்போதைய தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா ஆவார். தற்போதைய அமைச்சரவையின் மிக இளம் அமைச்சர் ஆவார். இவர் அரசு பள்ளி மாணவியை கேலி செய்ததாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் குற்றச்சாட்டுகளுக்கு, அவர் தனது எக்ஸ் பக்கத்தில் விரிவான விளக்கமளித்துள்ளார். அதில், தான் ஒரு அரசு பள்ளியில் தமிழ் வழியில் படித்து வளர்ந்தவள் என்பதைக் குறிப்பிட்டுள்ள அவர், கார்ப்பரேட் உலகிற்குள் நுழைந்தபோது ஆங்கிலத்தில் தடுமாறி, தவறுகள் செய்து, பின்னர் கற்றுக்கொண்டதாகத் தெரிவித்துள்ளார். இன்று தன் ஆங்கிலத்தை வைத்தும், மாணவியுடனான உரையாடலை வைத்தும் கேலி செய்பவர்கள், உண்மையில் தன்னைப் போன்ற லட்சக்கணக்கான அரசு பள்ளி மற்றும் தமிழ் வழி மாணவர்களின் தன்னம்பிக்கையையே அவமானப்படுத்துகிறார்கள் என்று அவர் வேதனை தெரிவித்துள்ளார். அரசு பள்ளி மாணவர்கள் எந்தவொரு உலக மேடையிலும் பயமின்றி, தலைநிமிர்ந்து பேசக்கூடிய சூழலை உருவாக்குவதே தனது உண்மையான நோக்கம் என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
இன்று சிலர், “அரசு பள்ளி மாணவியை கேலி செய்தார்” என்று ஒரு பொய்யான கதையை பரப்புகிறார்கள்.
உண்மை என்ன தெரியுமா?
நானே ஒரு அரசு பள்ளி மாணவி. நானே தமிழ் வழிக் கல்வியில் படித்தவள்.
இன்று என் ஆங்கிலத்தை வைத்து என்னை கேலி செய்கிறவர்கள், உண்மையில் என்னை மட்டும் அல்ல… என்னைப் போன்ற… pic.twitter.com/2ZKzH5bgX3— Virudhai Magal Keerthana (@Keerthana4VNR) July 7, 2026
மேலும், சர்ச்சைக்குரிய அந்த வீடியோவை தான் எடுக்கவில்லை என்றும், ஊடகங்கள் தங்களது செய்திக்காக எடுத்த காட்சிகளை வைத்து சிலர் பொய்யான கதைகளைப் பரப்புவதாகவும் அமைச்சர் தெளிவுபடுத்தியுள்ளார். தன்னை விமர்சிப்பவர்களை நோக்கி, “இன்று என்னை கேலி செய்யும் அரசியல்வாதிகள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்களின் குழந்தைகள் எத்தனை பேர் அரசு பள்ளிகளில், தமிழ் வழியில் படிக்கிறார்கள்?” என்ற காரசாரமான கேள்வியையும் அவர் முன்வைத்துள்ளார். அரசு பள்ளிகளை நம்பாதவர்கள், அங்கிருந்து படித்து வந்து இன்று இந்த உயரிய இடத்தில் நிற்கும் ஒரு பெண்ணை கேலி செய்வது எளிது என்றும், ஆனால் தங்களின் விமர்சனங்களுக்கு தனது இந்த வளர்ச்சியே ஆகச்சிறந்த பதில் என்றும் அமைச்சர் கீர்த்தனா தனது பதிவில் மிக அழுத்தமாகப் பதிலடி கொடுத்துள்ளார்.
