LATEST NEWS
“உழைப்பை மட்டும் விட்றாதீங்க நண்பா..” 250 ரூபாய் டூ 80 ஆயிரம்… 11 வயதில் தந்தை இழப்பு, வறுமையை விரட்டியடித்த தொழிலாளியின் வெற்றி பின்னணி..!!
டெல்லியில் சைக்கிளில் சென்று விற்று வந்த நபர் ஒருவர், தனது கடின உழைப்பால் இன்று மாதம் ரூ.80,000 முதல் ரூ.90,000 வரை சம்பாதித்து சாதனை படைத்துள்ளார். இன்ஸ்டாகிராமில் டிஜிட்டல் கிரியேட்டர் உபென் வர்மா என்பவர் பகிர்ந்த இந்த வியாபாரியின் நேர்காணல், சமூக வலைத்தளங்களில் லட்சக்கணக்கான மக்களின் நெஞ்சங்களைத் தொட்டு வைரலாகி வருகிறது. வறுமை, சிறு வயதிலேயே தந்தையை இழந்த வலி எனப் பல இன்னல்களுக்கு மத்தியிலும், தனது விடாமுயற்சியால் தன் குடும்பத்தின் தலையெழுத்தையே மாற்றியெழுதிய இவரது கதை பலருக்கும் நிஜமான உத்வேகமாக மாறியுள்ளது.
தனது சிறு வயதில் சொந்தமாக இருக்க ஒரு வீடு கூட இல்லாத கடுமையான வறுமைச் சூழலில், தனது தந்தையை இழந்ததாக அந்த நபர் மிகுந்த மனவேதனையுடன் பகிர்ந்துள்ளார். தந்தையின் மறைவுக்குப் பிறகு குடும்பத்தின் மொத்தப் பொறுப்பும் இவர் மீது விழுந்ததால், வெறும் 11 வயதிலேயே லஸ்ஸி விற்கும் தொழிலில் இறங்க வேண்டிய கட்டாயம் இவருக்கு ஏற்பட்டது. இவரது தந்தை உயிருடன் இருந்த காலத்தில் ஒரு நாளைக்கு வெறும் 250 ரூபாய் மட்டுமே வருமானமாக ஈட்ட முடிந்தது. ஆனால், பல தசாப்தங்களாகத் தொடர்ந்து சிந்திய வியர்வையின் பயனாக, இன்று டெல்லி லோதி ரோடு பகுதியில் லஸ்ஸி விற்று மாதம் சுமார் 80,000 ரூபாய்க்கு மேல் சம்பாதித்து வருகிறார்.
இந்த உழைப்பின் மூலம் தனது உடன்பிறந்தவர்களின் திருமணத்தை நடத்தி, சொந்தக் குடும்பத்தையும் கவனித்துக் கொண்டதோடு, உத்தரப் பிரதேசத்தில் தனது குடும்பத்திற்காக இரண்டு அடுக்கு மாடிப் பக்கா வீட்டையும் கட்டியுள்ளார். வாழ்க்கையில் விரக்தியடைந்து இனி ஒன்றும் செய்ய முடியாது என்று நினைப்பவர்களுக்குப் பாடம் புகட்டும் வகையில், “நண்பா, அப்படி எதுவும் இல்லை; உழைப்பை மட்டும் கைவிடாதீர்கள், கடவுளின் ஆசி கிடைத்து ஒருநாள் நீங்கள் நிச்சயம் பெரிய ஆளாக மாறுவீர்கள்” என்ற அழுத்தமான செய்தியையும் அவர் கூறியுள்ளார்.
