LATEST NEWS
ஸ்வீடனில் தீர்ந்துபோன குப்பை…! அடுத்த நாட்டு கழிவுகளை டன் கணக்கில் வாங்குவது ஏன்..? பின்னணியில் உள்ள மாபெரும் ரகசியம்..!!
குப்பை மேலாண்மையில் இந்தியா கடந்த காலங்களை விட முன்னேற்றம் கண்டிருந்தாலும், இன்னும் பல சவால்களை எதிர்கொண்டு வருகிறது. உலகின் சுத்தமான நாடுகளின் பட்டியலில் எஸ்டோனியா முதலிடத்தில் இருக்கும் நிலையில், இந்தியா 177 நாடுகளில் 176வது இடத்தில் இருப்பதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. ஆனால், இதற்கு முற்றிலும் மாறுபட்ட நாடாக ஸ்வீடன் உள்ளது. உலகின் மிகவும் சுத்தமான நாடுகளில் ஒன்றாகக் கருதப்படும் ஸ்வீடன், தனது ஆற்றல் தேவைகளுக்காக மற்ற நாடுகளிடமிருந்து குப்பைகளையே இறக்குமதி செய்கிறது.
ஸ்வீடனில் குப்பை வெறும் கழிவாகப் பார்க்கப்படுவதில்லை. மறுசுழற்சி செய்ய முடியாத கழிவுகளை நவீன ‘கழிவிலிருந்து ஆற்றல்’ ஆலைகளில் அதிக வெப்பநிலையில் எரித்து, அதிலிருந்து வெப்பமும் மின்சாரமும் உற்பத்தி செய்யப்படுகிறது. கழிவுகளை எரிப்பதால் உருவாகும் வெப்பத்தைப் பயன்படுத்தி தண்ணீர் சூடாக்கப்பட்டு, நிலத்தடிக் குழாய்கள் மூலம் வீடுகள் மற்றும் குடியிருப்புகளுக்குக் கொண்டு செல்லப்படுகிறது. இது கடுமையான குளிர்காலத்திலும் வீடுகளை வெப்பமாக வைத்திருக்க உதவுகிறது. மேலும், உருவாக்கப்படும் நீராவியைக் கொண்டு டர்பைன்களை இயக்கி மின்சாரம் தயாரிக்கப்பட்டு வீடுகள், அலுவலகங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு வழங்கப்படுகிறது. கழிவுகளை எரித்த பிறகு எஞ்சும் சாம்பல் போன்ற பொருட்களும் சாலை கட்டுமானம் உள்ளிட்ட தேவைகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன.
இதன் மூலம் குப்பையை அனுப்பும் நாடுகளுக்குக் குப்பைக்கிடங்குகளின் சுமை குறைகிறது; அதே நேரத்தில், ஸ்வீடனுக்குத் தன் ஆற்றல் நிலையங்களை இயக்குவதற்குத் தேவையான கழிவுகள் கிடைக்கின்றன. சில சந்தர்ப்பங்களில் கழிவுகளைப் பெற்றுக்கொள்வதற்காக ஸ்வீடனுக்குப் பணமும் வழங்கப்படுகிறது. கழிவுகளைக் குறைத்தல், மறுபயன்பாடு, மறுசுழற்சி, கழிவுகளை முறைப்படி பிரித்தல் மற்றும் எஞ்சிய கழிவுகளிலிருந்து ஆற்றலை மீட்டெடுத்தல் ஆகியவையே ஸ்வீடனின் வெற்றிக்கு முக்கியக் காரணங்களாகும். குப்பையை ஒரு சுமையாகப் பார்க்காமல், சரியான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அதை வளமாக மாற்ற முடியும் என்பதற்கு ஸ்வீடன் ஒரு சிறந்த உதாரணமாகத் திகழ்கிறது.
