LATEST NEWS
“பணத்தை விடுவிக்க பழம் கொடுத்த போலீஸ்..!” அயோத்தியில் பெண்ணிடம் ரூ.42,105-ஐ அபேஸ் செய்த குரங்கு… சாதுரியமாக மீட்ட போலீசாரின் வைரல் வீடியோ..!!
அயோத்தியின் கோத்வாலி நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிவில் லைன்ஸ் பகுதியில் அஞ்சு தேவி என்ற பெண்ணிடமிருந்த ரூ.42,105 ரொக்கப் பணத்தை ஒரு குரங்கு பிடுங்கிச் சென்றது. இதனால் அப்பெண் பெரும் கவலையில் மூழ்கிய நிலையில், அந்த குரங்கிடமிருந்து பணத்தை மீட்பது பெரும் சவாலாக மாறியது. நிலமையைப் புரிந்து கொண்ட காவல்துறையினர், குரங்கை விரட்டுவதோ அல்லது பயமுறுத்துவதோ சூழலை மேலும் மோசமாக்கும் என்பதால், மிகவும் கவனமாகச் செயல்படத் தீர்மானித்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த சப்-இன்ஸ்பெக்டர்கள் அசோக் குமார், பங்கஜ் சிங், ஹெட் கான்ஸ்டபிள் குல்தீப் யாதவ் மற்றும் கான்ஸ்டபிள் அங்கிட் ஆகியோர் குரங்கிடம் இருந்த பணத்தை மீட்க ஒரு வித்தியாசமான உத்தியைக் கையாண்டனர். குரங்குடன் நேரடியாக மோதாமல், அதற்கு ஒரு வாழைப்பழத்தை கொடுத்தனர். குரங்கு அந்த பழத்தைச் சாப்பிடுவதில் தனது கவனத்தைச் செலுத்திய போது, காவலர்கள் சாமர்த்தியமாகச் செயல்பட்டு குரங்கிடமிருந்த பணம் முழுவதையும் பத்திரமாக மீட்டனர்.
குரங்கிடமிருந்து மீட்கப்பட்ட ரூ.42,105 பணமும் சரியாகச் சரிபார்க்கப்பட்டு, உடனடியாக அஞ்சு தேவியிடம் ஒப்படைக்கப்பட்டது. தனது பணத்தை மீட்டுத் தந்ததற்காக அப்பெண் காவல்துறையினருக்குத் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். பலவந்தமாகப் பணத்தைப் பறிக்க முயலாமல், சமயோசிதமாகச் செயல்பட்டு குரங்கின் கவனத்தைத் திசைதிருப்பிப் பணத்தை மீட்ட காவல்துறையினரின் இந்தச் செயலை அப்பகுதி மக்களும் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.
