CRIME
“பெற்ற தாயை வீல்சேரோடு ரயிலில் தள்ளிய பாவி..!” திருத்தணியில் அரங்கேறிய நெஞ்சை பதறவைக்கும் கொடூரம்… சிசிடிவி ஆதாரத்தால் மகன் கைது..!!
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே உள்ள மணவூர் பகுதியில் 72 வயதான பத்மாவதி என்ற முதிய தாய், தனது மகன் பார்த்தசாரதியால் ரயிலில் தள்ளிவிட்டுப் படுகொலை செய்யப்பட்ட நெஞ்சை பதறவைக்கும் சம்பவம் அரங்கேறியுள்ளது. வயதான காலத்தில் படுத்தப் படுக்கையாக இருந்த பத்மாவதியை பராமரிப்பது தொடர்பாக குடும்பத்தில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் பார்த்தசாரதியின் மனைவி மற்றும் குழந்தைகள் கோபித்துக் கொண்டு சென்ற நிலையில், கடந்த 3 மாதங்களாகத் தாயைப் பராமரிக்க முடியாமல் தவித்த பார்த்தசாரதி, அவரைத் தனக்கு பாரமாகக் கருதி கொன்றுவிடத் திட்டம் தீட்டியுள்ளார்.
சம்பவத்தன்று இரவு, வெளியூர் அழைத்துச் செல்வதாக நம்பவைத்து, தாயை வீல்சேரில் அமரவைத்து மணவூர் ரயில் நிலைய பிளாட்பாரத்திற்கு பார்த்தசாரதி அழைத்து வந்துள்ளார். அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த ரயில் முன்னிலையில், எதிர்பாராதவிதமாகத் தாயை வீல்சேரோடு தண்டவாளத்தில் தள்ளிவிட்டுள்ளார். இதில் பலத்த காயமடைந்த பத்மாவதி உடனே பரிதாபமாக உயிரிழந்தார். தாய் ரயிலில் அடிபட்டு இறந்துவிட்டதாகக் காட்டிவிட்டு ஏதும் அறியாதவர் போல பார்த்தசாரதி வீட்டிற்குத் திரும்பியுள்ளார்.
ரயில் நிலையத்தில் சிதைந்த நிலையில் உடலும் சுக்குநூறான வீல்சேரும் கிடந்ததைக் கண்டு சந்தேகமடைந்த ரயில்வே போலீஸ், அங்குள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் பார்த்தசாரதி தாயை வீல்சேரில் தள்ளிக்கொண்டு வந்து ரயில் முன் தள்ளிய காட்சி பதிவாகியிருந்தது. இதன் அடிப்படையில் பார்த்தசாரதியைப் பிடித்துக் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில், அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரை கைது செய்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
