LATEST NEWS
“போட்டோவுக்கு போஸ் கொடுக்கவா இந்த ஓட்டம்…? பின்னாடியே காலியான போலீஸ் வேன் வருது… ஆனா காயமடைந்த பெண்ணைக் கையில தூக்கிட்டு ஓடிய இன்ஸ்பெக்டர்..! இது உதவியா இல்ல சிங்கம் பட போஸா..? என கலாய்க்கும் நெட்டிசன்கள்..!!”
உத்தரப் பிரதேச மாநிலம் பஹ்ரைச் மாவட்டத்தில் உள்ள கைரிகாட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தாலியா கிராமம் அருகே, வெள்ளிக்கிழமை மதியம் 55 வயதான காயத்ரி தேவி என்ற பெண் அடையாளம் தெரியாத வாகனம் மோதி வீதியோரம் சுயநினைவின்றி காயமடைந்து கிடந்துள்ளார். அப்போது வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த கைரிகாட் காவல் ஆய்வாளர் பிரதீப் குமார் சிங், அந்தப் பெண் காயமடைந்து கிடப்பதைப் பார்த்து உடனடியாக அவரைத் தனது கைகளில் தூக்கிக்கொண்டு அருகில் உள்ள சிவ்சரன் சிங் என்ற மருத்துவரிடம் சிகிச்சைக்காகச் சேர்த்து உடனடியாக முதலுதவி கிடைக்க வழிசெய்தார்.
போலீஸ் அதிகாரி ஒருவர் காயமடைந்த பெண்ணை உடனடியாக மீட்டு மருத்துவ உதவியை உறுதி செய்த இந்தச் செயலைத் உள்ளூர் மக்கள் வெகுவாகப் பாராட்டினர். அதேசமயம், விபத்துக்கான காரணம் குறித்தும், மோதிவிட்டுச் சென்ற அடையாளம் தெரியாத வாகனத்தைக் கண்டறியவும் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவம் குறித்துப் பேசிய ஆய்வாளர் பிரதீப் குமார் சிங், ரோந்துப் பணியின் போது காயமடைந்த பெண்ணைக் கண்டு உடனடியாக மருத்துவரிடம் சேர்த்ததாகவும், விபத்துக்கு காரணமான வாகனம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
இருப்பினும், இந்தச் சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து இணையவாசிகளிடையே கடும் விமர்சனத்தையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. ஆய்வாளர் பெண்ணைக் கைகளில் தூக்கிக்கொண்டு ஓடும்போது, அவருக்குப் பின்னாலேயே காலியாகப் போலீஸ் வேன் வந்துகொண்டிருந்ததைச் சுட்டிக்காட்டிய நெட்டிசன்கள், காரில் ஏற்றிச் சென்றிருந்தால் மருத்துவமனைக்கு இன்னும் வேகமாகச் சென்றிருக்கலாம் என்றும், புகைப்படக் காட்சிக்கும் விளம்பரத்திற்குமாகவே இவ்வாறு செய்தார்களா என்றும் கேள்வி எழுப்பி விமர்சித்து வருகின்றனர்.
