LATEST NEWS
“இனி நான்தான் இவளோட அம்மா..!” காப்பகத்தில் பசியால் அழுத 17 நாள் குழந்தைக்கு பாலூட்டிய நேபாள பெண் அமைச்சர்… நெகிழவைக்கும் வைரல் வீடியோ..!!
நேபாளத்தின் பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியோர் நலத்துறை அமைச்சர் சீதா பாடி, காத்மாண்டுவின் நக்சல் பகுதியில் உள்ள ‘பால் மந்திர்’ என்ற காப்பகத்திலிருந்து மீட்கப்பட்ட 17 நாட்களேயான ஒரு பெண் குழந்தைக்குத் தாய்ப்பால் புகட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, பரவலான பாராட்டுகளைப் பெற்று வருகிறது. சமூக வலைதளப் பதிவொன்றின் மூலம் இக்காப்பகத்தில் 15 நாட்கள் முதல் இரண்டு வயது வரையிலான சுமார் 20 குழந்தைகள் மிகவும் மோசமான சூழ்நிலையில் பராமரிக்கப்பட்டு வருவதை அறிந்த அமைச்சர், எவ்வித முன்அறிவிப்பும் இன்றி அங்கு நேரில் ஆய்வு மேற்கொண்டார். அங்கு மழைநீர் புகுந்து சாக்கடை கழிவுகளுடன் சாக்கடை வெள்ளம் சூழ்ந்திருந்த சூழலில், ஒரே அழுக்கு மெத்தையில் குழந்தைகள் கிடத்தப்பட்டிருந்ததையும், நோயுற்ற நிலையில் அவை பராமரிக்கப்படுவதையும் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், அதிகாரிகளின் உதவியுடன் அக்குழந்தைகளை உடனடியாக மீட்டெடுக்க உத்தரவிட்டார்.
மீட்கப்பட்ட குழந்தைகளுக்கு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டபோது, 17 நாட்களேயான ஒரு பெண் குழந்தை பசியால் தொடர்ந்து அழத் தொடங்கியது. ஆனால், அப்பகுதியில் அக்குழந்தைக்கு வழங்குவதற்குப் பாலோ உணவோ எதுவுமில்லை. இதைக் கண்ட அமைச்சர் சீதா பாடி, உடனடியாக அந்தக் குழந்தையைத் தன் கைகளில் ஏந்தித் தாய்ப்பால் புகட்டினார். பால் குடித்ததும் அக்குழந்தை அழுகையை நிறுத்தி அமைதியாக உறங்கியது. அன்று மாலையில் அமைச்சர் இரண்டு முறை அக்குழந்தைக்குப் பாலூட்டினார். இச்சம்பவம் குறித்துப் பேசிய அமைச்சர், “நான் அவளை ஏந்தியபோது, அவள் என் சொந்தக் குழந்தையைப் போலவே உணர்ந்தேன். இனி நான் தான் அவளுக்குத் தாய்” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
இந்தச் சம்பவம் அமைச்சர் சீதா பாடியின் பின்னணி குறித்த கவனத்தையும் ஈர்த்துள்ளது. 1995-இல் பிறந்த இவர், வறுமை மற்றும் சமூகப் பாகுபாடுகளுக்கு இடையே வளர்ந்து, சிறு வயதில் தொழிலாளியாகப் பணியாற்றி, பின்னர் காத்மாண்டுவிற்கு வந்து காப்பகம் ஒன்றில் தங்கிப் படித்து வளர்ந்தவராவார். பாடி சமூகத்திலிருந்து நேபாளத்தின் கூட்டாட்சி அமைச்சராகப் பொறுப்பேற்ற முதல் நபர் இவராவார். இந்த நிகழ்வைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட காப்பகத்தை மேம்படுத்த 5 புதிய பராமரிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் மற்றும் அரசு நிலத்தில் நான்கு மாதங்களுக்குள் புதிய கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
