LATEST NEWS
இனி பெரம்பூர் வேற லெவல்..! மாடல் தொகுதி 2.0′ மெகா பிளான்… களத்தில் இறங்கிய மாநகராட்சி ஆணையர்..! என்னென்ன வருது தெரியுமா..?!
சென்னை மாநகராட்சியின் முக்கியப் பகுதிகளில் ஒன்றான பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியை உலகத்தரம் வாய்ந்த ஒரு முன்மாதிரித் தொகுதியாக மாற்றுவதற்காக ‘2.0 வளர்ச்சி திட்டத்தை’ சென்னை மாநகராட்சி தீவிரமாகச் செயல்படுத்தி வருகிறது. இந்த உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் வட சென்னை மக்களின் நீண்ட கால கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் அதிநவீன மருத்துவமனைகள், புதிய பள்ளிக் கட்டிடங்கள், உயர்தர விளையாட்டு வளாகங்கள் மற்றும் நவீன உணவு வளாகங்கள் ஆகியவை அமைக்கப்பட உள்ளன. இந்த மெகா திட்டப் பணிகளை விரைந்து முடிப்பதற்காக, சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையர் டாக்டர் ஜி.எஸ். சமீரன், இ.ஆ.ப., அவர்கள் பெரம்பூர் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நேரில் சென்று அதிரடி கள ஆய்வுகளை மேற்கொண்டு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, தண்டையார்பேட்டை மண்டலம் சத்தியமூர்த்தி நகரில் தற்பொழுது செயல்பட்டு வரும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார மைய வளாகத்தில், ‘நமக்கு நாமே’ திட்டத்தின் கீழ் சுமார் ரூ.86.70 லட்சம் மதிப்பீட்டில் கூடுதலாகக் கட்டப்பட்டு வரும் அதிநவீன மருத்துவமனைக் கட்டிடப் பணிகளை ஆணையர் சமீரன் ஆய்வு செய்தார். மேலும், இளைஞர்கள் மற்றும் சிறுவர்களின் விளையாட்டுத் திறனை ஊக்குவிக்கும் வகையில் சர்மா நகர் மற்றும் எம்.கே.பி நகர் பகுதிகளில் ரூ.1.48 கோடி மதிப்பீட்டில் புதிய உள்விளையாட்டு வளாகமும், மாமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் 1120 சதுர மீட்டர் பரப்பளவில் அதிநவீன சிறுவர் சறுக்கு விளையாட்டு மைதானமும் அமைக்கப்பட்டு வருகின்றன. இவற்றுடன் வியாசர்பாடி பகுதியில் புதிய அதிநவீன இரத்த சுத்திகரிப்பு நிலையம் அமைப்பது மற்றும் அம்பேத்கர் அரசு கலைக் கல்லூரி வளாக குளங்களைச் சீரமைப்பது குறித்தும் விரிவான திட்ட அறிக்கைகள் தயாரிக்கப்பட்டுள்ளன.
மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஓட்டேரி நல்லா கால்வாய் பகுதியில் ரூ.65 கோடி மதிப்பீட்டில் தூர்வாரும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதேபோல் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் கணேசபுரத்தில் ரூ.226.55 കോடி மதிப்பீட்டில் புதிய மேம்பாலப் பணிகளும் தற்பொழுது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பெரம்பூர் தொகுதியின் ஒட்டுமொத்த முகவரியையே மாற்றியமைக்கக் கூடிய இந்த அடுத்தகட்ட உள்கட்டமைப்பு பணிகளை விரைந்து முடித்து மக்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
