LATEST NEWS
திருப்பதிக்கு நடந்து போறீங்களா? அலிபிரி பாதையில் பதுங்கியிருக்கும் சிறுத்தை… அதிகாரிகளின் அவசர எச்சரிக்கை..!!
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குச் செல்லும் அலிபிரி மலைப்பாதையில் சமீபகாலமாக வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. குறிப்பாக, நேற்று இரவு நரசிம்ம சுவாமி கோவில் அருகே திடீரென சிறுத்தை ஒன்று தென்பட்டதால், மலைப்பாதையில் நடந்து சென்ற பக்தர்கள் கடும் அச்சத்திற்கு உள்ளாகி சிதறி ஓடினர். இத்தகைய அசம்பாவிதங்களைத் தொடர்ந்து, மலையேறும் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் முக்கிய அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது.
மலைப்பாதையில் செல்லும் பக்தர்கள் இரவு நேரங்களில் தனியாகப் பயணம் செய்வதை முற்றிலும் தவிர்த்து, எப்போதும் குழுவாகவே செல்ல வேண்டும் என அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். குறிப்பாக, சிறு குழந்தைகளுடன் வரும் பெற்றோர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும், எக்காரணம் கொண்டும் குழந்தைகளைத் தனியாக விடக்கூடாது என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளனர். பக்தர்களின் அச்சத்தைப் போக்கும் விதமாக வனத்துறை அதிகாரிகள் தொடர் ரோந்துப் பணிகளில் ஈடுபட்டு வருவதுடன், சிசிடிவி கேமராக்கள் மூலமும் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
ஒருபுறம் கட்டுப்பாடுகள் இருந்தாலும், திருப்பதி கோவிலில் பக்தர்களின் கூட்டம் தொடர்ந்து அலைமோதுகிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் சுமார் 73,265 பேர் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். மேலும், 39,690 பக்தர்கள் தங்களது முடி காணிக்கையைச் செலுத்தியுள்ளனர். உண்டியல் வருமானமாக 4.26 கோடி ரூபாய் வசூலாகியுள்ளது. இலவச தரிசனத்திற்காக வந்த பக்தர்கள் சுமார் 30 மணி நேரம் வரை நீண்ட வரிசையில் பொறுமையுடன் காத்திருந்து ஏழுமலையானை தரிசித்துச் சென்றனர்.
