LATEST NEWS
காதலனா அல்லது கொடூரனா?… திருமணத்தை நிறுத்த இளம்பெண்ணின் மானத்தை வாங்கிய இளைஞர்… போலீஸ் அதிரடி…!!
தெலங்கானா மாநிலம் சித்திப்பேட்டை அருகே, தான் விரும்பிய பெண்ணுக்கு வேறொரு நபருடன் திருமணம் நிச்சயமாகியதால் விரக்தியடைந்த இளைஞர் ஒருவர் மிக மோசமான செயலில் ஈடுபட்டுள்ளார். துப்பாக் மண்டலத்தைச் சேர்ந்த பயண முகவரான வெங்கடேஷ் என்ற 29 வயது இளைஞர், என்சன்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த பெண்ணை சில காலமாக காதலித்து வந்துள்ளார். ஆனால், அந்தப் பெண்ணின் பெற்றோர் அவருக்கு தங்கலபள்ளி கிராமத்தைச் சேர்ந்த வேறொரு நபருடன் திருமணத்தை முடிவு செய்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த வெங்கடேஷ், அந்தப் பெண் தனக்குக் கிடைக்கவில்லை என்றால் வேறு யாருக்கும் சொந்தமாகக் கூடாது என்ற தவறான எண்ணத்தில், அவளது திருமணத்தை எப்படியாவது தடுத்து நிறுத்த சதித்திட்டம் தீட்டியுள்ளார்.
தன் வன்மத்தை தீர்த்துக்கொள்ளும் விதமாக, அந்தப் பெண்ணின் புகைப்படத்தைப் பயன்படுத்தி, அவருக்கும் தனக்கும் தவறான உறவு இருப்பதாகக் கூறி மிகவும் அவதூறான சுவரொட்டிகளை வெங்கடேஷ் தயாரித்துள்ளார். பின்னர், கடந்த ஜூலை 7-ஆம் தேதி இரவு தனது நண்பர்களின் உதவியோடு அந்த சுவரொட்டிகளை அப்பெண்ணின் ஊரான என்சன்பள்ளியிலும், மாப்பிள்ளையின் ஊரான தங்கலபள்ளியிலும் பல்வேறு இடங்களில் ஒட்டியுள்ளார். இந்த சுவரொட்டிகள் கிராம மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்திய நிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில், சித்திப்பேட்டை காவல்துறையினர் அச்சுறுத்தல், அவதூறு பரப்புதல் உள்ளிட்ட பாரதிய நியாய சம்ஹிதாவின் (பிஎன்எஸ்) பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், சிசிடிவி கேமராக்களின் பதிவுகளைக் கொண்டு தீவிர விசாரணை நடத்தி, முக்கிய குற்றவாளியான வெங்கடேஷ் மற்றும் அவனுக்கு உடந்தையாக இருந்த அவனது நண்பர்கள் ஐந்து பேர் என மொத்தம் ஆறு பேரை அதிரடியாகக் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில், சுவரொட்டி ஒட்டப் பயன்படுத்திய கார், செல்போன்கள் மற்றும் அச்சிடப்பட்ட தாள்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், பெண்களுக்கு எதிரான இதுபோன்ற அவதூறு கருத்துக்களை உள்ளடக்கிய சுவரொட்டிகளின் உண்மைத்தன்மையைச் சரிபார்க்காமல் அச்சடித்துக் கொடுக்கும் அச்சக உரிமையாளர்கள் மீதும், அவற்றை சமூக வலைத்தளங்களில் பகிர்வோர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
