LATEST NEWS
“நீங்காத நித்திரைக்குச் சென்றுவிட்டாயே…தேன்குரல் தேவதை..!” எஸ்.ஜானகி மறைவால் கலங்கி நின்ற டி.ராஜேந்தர்..!!
தென்னிந்தியத் திரையுலகின் ‘இசைக்குயில்’ என்று அன்போடு அழைக்கப்படும் பாடகி எஸ். ஜானகி அவர்கள் வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக மைசூரில் காலமானார். இச்செய்தி தன் நெஞ்சத்தை வாட்டுகிறது என்று உருகிய டி.ராஜேந்தர், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி எனப் பல மொழிகளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி, 4 முறை தேசிய விருதுகளைக் குவித்த அந்தத் ‘தேன் குரல் தேவதை’ மறைந்துவிட்டார் என்று தனது ஆழ்ந்த சோகத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
டி.ராஜேந்தர் இயக்கி, இசையமைத்த திரைப்படங்களில் எஸ். ஜானகி பாடிய பாடல்களை அவர் நன்றியோடு நினைவு கூர்ந்துள்ளார். குறிப்பாக, ‘நெஞ்சில் ஒரு ராகம்’ படத்தில் “நெஞ்சம் பாடும் புதிய ராகம்…”, ‘ஆராதனை’ படத்தில் “வசந்தம் பாடி வர…” போன்ற பாடல்களைப் பாடி, தனது மெட்டுகளுக்கு எஸ். ஜானகி அவர்கள் உயிரூட்டி, மெருகேற்றினார் என்று டி.ராஜேந்தர் உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ‘சம்சார சங்கீதம்’ திரைப்படத்தில் தனது மகன் சிலம்பரசனுக்காக எஸ். ஜானகி பாடிய “ஐ அம் எ லிட்டில் ஸ்டார்… ஆவேன் நான் சூப்பர் ஸ்டார்…” என்ற புகழ்பெற்ற பாடலை சுட்டிக்காட்டிய டி.ராஜேந்தர், “அன்று என் மகனுக்காகப் பாடி முத்திரை பதித்த நீ, இன்று நீங்காத நித்திரைக்குச் சென்றுவிட்டாயே” என்று வேதனைப்பட்டுள்ளார். இறுதியில், ஜானகி அவர்களின் குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் தனது ஆறுதலைத் தெரிவித்துக் கொண்டதுடன், அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்பதாகவும் கூறியுள்ளார்.
