LATEST NEWS
“உன்னால முடிஞ்சதை பார்த்துக்கோ” போலீஸ் ஸ்டேஷனிலேயே SI-க்கு தவெக நிர்வாகி மிரட்டல்… மதுராந்தகத்தில் நள்ளிரவில் பரபரப்பு..!!
மதுராந்தகம் அருகே வீடு புகுந்து பெண்களைத் தாக்கியதாக தமிழக வெற்றிக் கழகத்தின் கிளைச் செயலாளர் ஏழுமலை என்பவர் மீது காவல் நிலையத்தில் பரபரப்புப் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மதுராந்தகம் சுற்றுவட்டாரப் பகுதியில் தவெக கிளைச் செயலாளராகப் பொறுப்பு வகித்து வரும் ஏழுமலை, நேற்றிரவு பக்கத்து வீட்டில் வசிக்கும் பெண்களின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து அவர்களைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இந்த அநீதி குறித்து பாதிக்கப்பட்ட பெண்கள் தரப்பில் உடனடியாக ‘சிங்கப் பெண் படை’ அமைப்பிடம் புகார் தெரிவிக்கப்பட்டு, அது காவல்துறையின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது.
இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பாகப் போலீஸார் விசாரணை நடத்துவதற்காக ஏழுமலையைக் காவல் நிலையத்திற்கு வரவழைத்தனர். அப்போது காவல் நிலையத்திற்குள் வைத்தே அங்கிருந்த காவல் உதவி ஆய்வாளரை (SI) தவெக நிர்வாகி ஏழுமலை ஒருமையில் பேசி, மிரட்டல் விடுத்ததாகக் கடுமையான குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், அங்கிருந்த போலீஸாரைப் பார்த்து “உன்னால் முடிந்ததைப் பார்த்துக் கொள்” என்று அவர் பகிரங்கமாக மிரட்டி விட்டுச் சென்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு அதிகாரிகளைப் பணி செய்ய விடாமல் மிரட்டிய தவெக நிர்வாகியின் இந்தச் செயலால் மதுராந்தகம் பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
