LATEST NEWS
டேய் யாருடா நீங்க.? வாய்க்குள் போலி வைரம்.. கையில் ரூ.1.3 கோடி உண்மையான வைரம்… சிங்கப்பூரையே உலுக்கிய இந்தியர்களின் பகீர் திருட்டு பிளான்..!!
சிங்கப்பூரின் புகழ்பெற்ற சைனாடவுன் பகுதியில் உள்ள நகைக்கடை ஒன்றில், சுமார் ரூ.1.3 கோடி (1.54 லட்சம் அமெரிக்க டாலர்) மதிப்புள்ள 4.95 காரட் உண்மையான வைரத்தைத் திருடிவிட்டு, அதற்குப் பதிலாகப் போலி வைரத்தை மாற்றி வைக்க முயன்ற இந்தியர்கள் இருவரின் சினிமா பாணி திருட்டுத் திட்டம் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் சூரத் நகரைச் சேர்ந்த மங்க்ரோலியா மனோஜ்குமார் குர்ஜிபாய் (41) மற்றும் செராசியா மிலன் ராம்னிக்பாய் (30) ஆகிய இருவருமே சுற்றுலா விசா மூலம் சிங்கப்பூர் வந்து இந்த நூதனத் திருட்டில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் திருடத் திட்டமிட்ட வைரத்தின் வடிவம், அளவு, அடையாள எண்கள் அப்படியே பொருந்துமாறு ஒரு போலி வைரத்தை இந்தியாவிலேயே முன்கூட்டியே தயாரித்துக் கொண்டு வந்துள்ளனர்.
கடந்த ஜூன் 19 அன்று Dianoche என்ற நகைக்கடைக்கு வாடிக்கையாளர்கள் போலச் சென்ற இவர்கள், உயர்தர வைரத்தைப் பார்க்க வேண்டும் எனக் கேட்டுள்ளனர். தொடர்ந்து, அங்கிருந்த கடை மேலாளரின் கவனத்தை ஒரு நபர் திசைதிருப்ப, மற்றொருவர் தனது வாய்க்குள் மறைத்து வைத்திருந்த போலி வைரத்தை வெளியே எடுத்து உண்மையான வைரத்திற்குப் பதிலாக மாற்றியுள்ளார். பின்னர் உண்மையான வைரத்தைத் தனது வாயில் மறைத்துக் கொண்டு இருவரும் கடையை விட்டு தப்பியுள்ளனர். இவர்கள் வெளியேறியதும் சந்தேகமடைந்த மேலாளர், வைரத்தைப் பரிசோதனை இயந்திரம் மூலம் சோதித்தபோது அது போலி எனத் தெரியவரவே உடனடியாகப் போலீசாருக்குத் தகவல் கொடுத்துள்ளார்.
CCTV காட்சிகளின் உதவியோடு சிங்கப்பூர் போலீசார் மின்னல் வேகத்தில் அதிரடி நடவடிக்கையில் இறங்கினர். திருட்டை முடித்துவிட்டு அன்றே மாலை இந்தியா தப்பிச் செல்ல சாங்கி சர்வதேச விமான நிலையத்தின் குடியுரிமை சோதனையைக் கடக்க முயன்ற இருவரையும் போலீசார் மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து உண்மையான வைரம் பத்திரமாக மீட்கப்பட்டது. இந்தத் திட்டமிட்ட சர்வதேசக் குற்றச்சாட்டின் கீழ் கைதான மனோஜ்குமாருக்குச் சிங்கப்பூர் நீதிமன்றம் 2 ஆண்டுகள், 2 மாதங்கள் மற்றும் 2 வாரங்கள் சிறைத் தண்டனை விதித்துள்ளதுடன், மற்றொரு நபர் மீதான விசாரணை தனியாக நடந்து வருகிறது.
