CRIME
பெரியம்மாவை தீர்த்துக்கட்டிவிட்டு… போலீசிடமே ‘ஸ்கெட்ச்’ போட்டு நாடகமாடிய வாலிபர்..! அடுத்தடுத்து வெளிவரும் மூதாட்டிகளின் மர்மக் கொலைகள்..!!!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே, கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு அங்கன்வாடி மேற்பார்வையாளராக இருந்து ஓய்வு பெற்ற கலாவதி என்ற மூதாட்டி, தனது வீட்டின் உள்ளே கழுத்தில் பலத்த வெட்டுக் காயங்களுடன் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவர் அணிந்திருந்த சுமார் 15 பவுன் தங்க நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன. இந்த சம்பவம் தொடர்பாக அதே கிராமத்தைச் சேர்ந்த திருமேனி முருகன் என்ற இளைஞர், தானே காவல் நிலையத்திற்கு போன் செய்து கலாவதி கொலை செய்யப்பட்டு கிடப்பதாக தகவல் கொடுத்து நாடகமாடியுள்ளார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காடல்குடி போலீசார், மோப்ப நாய் மற்றும் தடயவியல் நிபுணர்களின் உதவியுடன் தீவிர விசாரணையைத் தொடங்கினர். காவல்துறையினர் அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, காவல் துறைக்கு போன் செய்து தகவல் கொடுத்த திருமேனி முருகன், அதிகாலை 4 மணி அளவில் கலாவதியின் வீட்டின் அருகே சந்தேகப்படும்படி நடமாடியது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் அவரிடம் நடத்திய தீவிர விசாரணையில், சொகுசு வாழ்க்கை வாழ்வதற்கும் தனது காதலிக்கு செலவு செய்வதற்கும் பணத் தேவை இருந்ததால், பெரியம்மா முறையுள்ள கலாவதியை நகைகளுக்காக அவரே வெட்டிக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
கைது செய்யப்பட்ட திருமேனி முருகனிடம் போலீசார் மேலும் நடத்திய தொடர் விசாரணையில் அதிர்ச்சியூட்டும் உண்மைகள் பல வெளியாகின. அவர் கடந்த காலங்களில் இதேபோன்று விளாத்திகுளம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தனியாக வசித்து வந்த மேலும் சில மூதாட்டிகளை நகைகளுக்காக அடுத்தடுத்து கொலை செய்திருப்பதாக ஒப்புக்கொண்டுள்ளார். இந்த தொடர் கொலை சம்பவங்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும் பரபரப்பையும், பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
