CRIME
மது அரக்கனால் விடிந்த அவலம்!.. பெட்ரோல் ஊற்றி ஒட்டுமொத்த குடும்பத்தையும் கொளுத்திய கொடூரன்.. நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்..!!
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை லெட்சத்தோப்பு பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி செல்வராஜ், குடும்பச் செலவுக்காகத் தனது மனைவி விஜயலெட்சுமியிடம் அடிக்கடி பணம் கேட்டு வற்புறுத்தி வந்துள்ளார். இதனால் இவர்களுக்குள் தொடர்ந்து கருத்து வேறுபாடும் வாக்குவாதமும் நிலவி வந்த நிலையில், நேற்று முன்தினம் இரவும் மீண்டும் இதுதொடர்பாகப் பெரும் தகராறு ஏற்பட்டுள்ளது. மனைவி பணம் தர மறுத்ததால் கடும் ஆத்திரமடைந்த செல்வராஜ், நேற்று அதிகாலை நேரத்தில் வீட்டில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த மனைவி விஜயலெட்சுமி, கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்த மூத்த மகள் மேனகா மற்றும் இளைய மகள் மவுனிகா ஆகிய மூவர் மீதும் பெட்ரோலை ஊற்றி கொடூரமாகத் தீ வைத்துள்ளார்.
உடல் வெந்து வலியால் அலறிய மூவரின் கூக்குரலையும் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர், உடனடியாகத் தீயை அணைத்து அவர்களைக் காப்பாற்றினர். பலத்த தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட தாய் மற்றும் இரு மகள்களும் சிகிச்சைக்காகத் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், தப்பியோட முயன்ற செல்வராஜைக் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடும்பத் தகராறில் மூன்று பெண்களின் உயிரைப் பந்தாடிய இந்தக் கொடூரச் சம்பவம் பட்டுக்கோட்டை சுற்றுவட்டாரப் பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
