LATEST NEWS
“இருதயத்தின் ரத்தம் மார்பில் வடிகிறது..! தமிழ்த்தாய் வாழ்த்துக்கு ஆளுநர் தந்த அதிர்ச்சி உத்தரவ… வைரமுத்து ஆவேசம்..!!”
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33வது பட்டமளிப்பு விழா ஜூலை 28 அன்று நடைபெற உள்ள நிலையில், இதில் தமிழ்நாடு ஆளுநர் பங்கேற்கிறார். இந்நிகழ்வில் முதலில் வந்தே மாதரம், அதன் பிறகு தேசிய கீதம், மூன்றாவதாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட வேண்டும் என ஆளுநர் அலுவலகத்திலிருந்து சுற்றறிக்கை வந்துள்ளதாகவும், அதன்படியே நிகழ்ச்சி நடைபெறும் என்றும் பல்கலைக்கழகத் துணைவேந்தர் என். சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் தளப் பதிவில், ஆளுநரின் இந்த அறிவுறுத்தல் அச்சம் தருவதாகவும், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் நீண்டகால மரபுகள் நொறுக்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஒரு மாநிலத்தின் சட்டமன்றத்திலோ, ஆளுநர் மாளிகையிலோ அல்லது மாநிலக் கல்வி எல்லைக்குட்பட்ட பல்கலைக்கழகங்களிலோ முதலில் மாநில மொழியின் வாழ்த்தும், பின்னர் தேசிய கீதமும் பாடப்படுவதே நடைமுறையாக இருந்து வந்த மரபு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், தமிழ்த்தாய் வாழ்த்தை இயற்றிய மனோன்மணியம் சுந்தரனாரின் பெயரில அமைந்த பல்கலைக்கழகத்திலேயே தமிழ்த்தாய் வாழ்த்து தரைக்குத் தள்ளப்படுவதா? இருதயத்தின் ரத்தம் மார்பில் வடிகிறது வேண்டாம் இந்த வரிசை மீறல்.அந்தந்த மாநில மொழிகளுக்கு முன்னுரிமை தருவதுதான் இறையாண்மையின் நிறையாண்மை காக்கும் முறையாண்மையாகும் என்றும் வெற்றித் தமிழர் பேரவை சார்பில் தனது கண்டனத்தைப் பதிவுசெய்வதாகவும் கூறியுள்ள அவர், கழற்றப்பட்ட தமிழ்த்தாயின் மகுடம் மீண்டும் சிரசு சேர வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
