LATEST NEWS
“சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் தியாகத்தைக் கொச்சைப்படுத்துவதா..?” சோனியா காந்தி செய்தது மன்னிக்க முடியாத பாவம்…! காங்கிரஸ் சைகை சர்ச்சை குறித்து அமித் ஷா கடும் சாடல்..!!
இன்று முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் நினைவு தினத்தை முன்னிட்டு, ராஜஸ்தான் மாநிலம் சித்தோர்கரில் அடல் பிஹாரி வாஜ்பாயின் 21 அடி உயரச் சிலையை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் பேசிய அமித் ஷா, நேற்று நடைபெற்ற 80வது சுதந்திர தின நிகழ்வின்போது காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் வந்தே மாதரம் பாடப்படும்போது சோனியா காந்தி செய்த சைகை குறித்துக் கடும் விமர்சனங்களை முன்வைத்தார்.
அந்த நிகழ்வில் வந்தே மாதரம் பாடப்படும் போது சோனியா காந்தி கையை உயர்த்திச் சைகை செய்தார். அது வந்தே மாதரம் பாடலை பாதியில் நிறுத்தச் சொல்வது போல் இருப்பதாக பாஜக குற்றச்சாட்டு எழுப்பியது. ஆனால், இது குறித்துக் காங்கிரஸ் தரப்பு அளித்த விளக்கத்தில், கட்சியின் மூத்த தலைவர் கார்கே நீண்ட நேரம் நின்றுகொண்டிருந்ததால் அவர் அமர்வதற்காக நாற்காலியைக் கொண்டுவரச் சொல்லியே சோனியா காந்தி அந்தச் சைகையைச் செய்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்குப் பதிலளித்துப் பேசிய அமித் ஷா, “சோனியா ஜி, நாட்டின் 140 கோடி மக்களும் உங்களைக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் செய்த இந்த பாவத்தை இந்த நாட்டு மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். வந்தே மாதரம் பாடலை பாதியில் நிறுத்துவது பற்றி ஒருவரால் எப்படி நினைக்க முடியும்? காங்கிரஸ் தலைவர்கள் இதற்காக வெட்கப்பட வேண்டும்” என்று சாடினார். மேலும், பங்கிம் சந்திர சட்டர்ஜி எழுதிய வந்தே மாதரம் பாடல் சுதந்திரப் போராட்டத்தின் போது தியாகிகள் தூக்குமேடை ஏறும்போது பாடிய தாரக மந்திரம் என்றும், அந்தப் பாடலை அவமதிப்பது தியாகிகளின் தியாகத்தைக் கொச்சைப்படுத்துவதாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
