LATEST NEWS
“என்னை என்ன வேணா பண்ணிக்கோ… சாகக் கூடத் தயார்… ஆனா பயந்தாங்கோளி நீதிபதியா மட்டும் வாழ மாட்டேன்..!” கொலைகாரனுக்கு மரண தண்டனை கொடுத்து மாஃபியாக்களை கதறவிட்ட நீதிபதி..!!
உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்ட நீதிமன்றத்தின் கூடுதல் செஷன்ஸ் நீதிபதி ரவி குமார் திவாகர், தனது மனைவியைக் கொலை செய்த குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார். இத்தீர்ப்பின் போது நீதிபதி குறிப்பிட்ட சில கருத்துக்கள் நாடு முழுவதும் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளன. உத்தரப் பிரதேசத்தின் நீதித்துறையில் மாஃபியாக்கள் மற்றும் செல்வாக்குமிக்க குற்றவாளிகளின் ஆதிக்கம் அதிகரித்து வருவதைக் சுட்டிக்காட்டிய அவர், “நான் சாகக்கூடத் தயார், ஆனால் ஒரு பயந்தாங்குளி நீதிபதி என்று அழைக்கப்படுவதை எந்தச் சூழ்நிலையிலும் ஏற்றுக்கொள்ள மாட்டேன்” என்று தனது தீர்ப்பில் மிகவும் துணிச்சலாக எழுதியுள்ளார்.
தனது உத்தரவில் மேற்கு உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ரவுடிகள் மற்றும் மாஃபியாக்களுக்கு வழங்கப்படும் அரசியல் பாதுகாப்பைக் கடுமையாக விமர்சித்துள்ள நீதிபதி, தனக்கு ஒரு மாஃபியா கும்பலிடமிருந்து வந்த மிரட்டலையும் குறிப்பிட்டுள்ளார். வழக்குகளின் ஆவணங்களை நீக்கிய அந்த மாஃபியா, தனது செல்வாக்கைப் பயன்படுத்தி நீதிபதியின் நீதிமன்றத்தை மாற்றவோ அல்லது அவரை வேறு மாவட்டத்திற்கு மாற்றவோ முடியும் என்று மிரட்டியதாகக் கூறியுள்ளார். இதைக் கண்டித்த நீதிபதி, குற்றவாளிகள் தங்களுக்கு சாதகமான நீதிமன்றங்களைத் தேர்வு செய்யும் முறையைத் தடுக்க உடனடியாகத் தலையிடுமாறு இந்தத் தீர்ப்பின் நகலை உத்தரப் பிரதேச தலைமைச் செயலாளருக்கு அனுப்பி உத்தரவிட்டுள்ளார்.
நீதித்துறையில் குற்றவாளிகள் மற்றும் மாஃபியாக்கள் ஏற்படுத்தும் தலையீடு குறித்து தனது கவலையைப் பதிவு செய்த நீதிபதி, நிலம், ஒப்பந்தங்கள் மற்றும் அரசியல்-சமூக தொடர்புகளிலிருந்தே மாஃபியாக்களின் உண்மையான பலம் உருவாவதாகக் குறிப்பிட்டார். முசாபர்நகர் நீதிமன்றத்தில் விக்கி தியாகி படுகொலை செய்யப்பட்டது மற்றும் ஷோக்கீன் கேங் போன்ற குற்றக் கும்பல்களின் அச்சுறுத்தல்களை நினைவு கூர்ந்த அவர், நீதிபதிகள் ரவுடிகள் அல்லது மாஃபியாக்களின் அழுத்தத்திற்குப் பணிந்து செயல்படத் தொடங்கினால், நீதித்துறை மீது பொதுமக்கள் வைத்துள்ள நம்பிக்கை முற்றிலுமாக சீர்குலைந்துவிடும் என்று வலியுறுத்தியுள்ளார்.
