LATEST NEWS
செத்துப்போனதா மனிதநேயம்..? “வாங்குன கடன குடுத்துட்டு போ” நிறைமாத கர்ப்பிணிக்கு நேர்ந்த கொடூரம்… பாதி பிறந்த நிலையில் குழந்தையுடன் துடிதுடித்துப் பலி.. காஞ்சிபுரத்தில் அதிர்ச்சி..!!
காஞ்சிபுரம் மாவட்டம் சிங்காடிவாக்கம் பகுதியைச் சேர்ந்த இருளர் சமூகத்தைச் சேர்ந்த தேன்மொழி (35) என்ற நிறைமாத கர்ப்பிணிப் பெண், வாங்கிய கடனைத் திருப்பிக் கேட்கும் நோக்கில் மரக்கடை உரிமையாளரால் மருத்துவமனைக்குச் செல்ல அனுமதிக்கப்படாததால், முறையான மருத்துவ உதவி கிடைக்காமல் கூடாரத்திலேயே பச்சிளம் குழந்தையுடன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தேன்மொழியும் அவரது கணவர் ஆனந்தனும் அரக்கோணம் சாலையில் உள்ள ஆறுமுகம் என்பவருக்குச் சொந்தமான மரக்கடையில் கடந்த 6 மாதங்களாகத் தங்கி மரம் வெட்டும் கூலி வேலை செய்து வந்துள்ளனர். வேலைக்காக அவர்கள் ஆறுமுகத்திடம் இருந்து ரூபாய் 20,000 கடன் வாங்கியதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், தேன்மொழிக்குத் திடீரென கடுமையான பிரசவ வலி ஏற்பட்டபோது, அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல அனுமதிக்குமாறு அவரது குடும்பத்தினர் ஆறுமுகத்திடம் கெஞ்சியுள்ளனர். ஆனால், வாங்கிய கடனைத் திருப்பித் தராமல் மரம் வெட்டும் இடத்தை விட்டு நகலக் கூடாது என்று கூறி ஆறுமுகம் அவர்களை மருத்துவமனைக்குச் செல்லவிடாமல் தடுத்து நிறுத்தியுள்ளார். இதன் காரணமாக, தங்கியிருந்த கூடாரத்திலேயே தேன்மொழிக்குப் பிரசவம் நடந்துள்ளது. குழந்தையின் உடல் பாதி வெளியே வந்த நிலையில், தீவிர வலி மற்றும் அதிக ரத்தப்போக்கு காரணமாகத் தேன்மொழியும் அவரது பச்சிளம் குழந்தையும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர்.
இந்தக் கொடூர மரணத்தை மறைக்க முயன்ற உரிமையாளர் ஆறுமுகம், விபரீதத்தை யாருக்கும் சொல்லக் கூடாது என மிரட்டி, படிப்பறிவில்லாத அந்த இருளர் குடும்பத்தினரிடம் வெறும் ₹2,000 பணத்தைக் கொடுத்து உடல்களை அவர்களின் குடியிருப்புக்கு அனுப்பி வைத்துள்ளார். அதிர்ச்சியடைந்த இருளர் மக்கள் உடல்களுடன் குடியிருப்புக்குத் திரும்பிய நிலையில், இதுகுறித்து பழங்குடியின மக்கள் உரிமை அமைப்பான ‘மக்கள் மன்றம்’ ஒருங்கிணைப்பாளர் மகேஷிற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரது வழிகாட்டுதலின்படி பொன்னேரிகரை காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், போலீசார் தற்போது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
