LATEST NEWS
“விஐபி-க்கள் கவனத்திற்கு..! இனி முன்அனுமதி இல்லாம எந்த VIP-யும் கோயிலுக்குள் வர முடியாது… அறநிலையத்துறை போட்ட புது ரூல்ஸ்..!!”
தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சுமார் 44,000 கோயில்களுக்கு நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். சமீபத்தில் திருத்தனி கோயிலுக்குச் சென்ற முன்னாள் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிகழ்வைத் தொடர்ந்து, அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் அவர்கள், அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள முதுநிலைத் திருக்கோயில்களில் பின்பற்றப்பட வேண்டிய புதிய முக்கிய வழிகாட்டுதல்களையும் உத்தரவுகளையும் பிறப்பித்துள்ளார்.
முதலாவதாக, திரைத்துறை பிரபலங்கள், முக்கியஸ்தர்கள் அல்லது விஐபிக்கள் கோயிலுக்கு தரிசனம் செய்ய வருவதாக இருந்தால், குறைந்தது ஒரு நாளுக்கு முன்பாகவே அவர்கள் வரும் கோயில், வருகை நேரம் மற்றும் அவர்களுடன் வருபவர்களின் எண்ணிக்கை குறித்த முழு விவரங்களையும் அமைச்சரின் அலுவலகத்திற்கு கட்டாயமாகத் தெரிவிக்க வேண்டும். இரண்டாவதாக, வரும் 01.09.2026 முதல் அனைத்து முதுநிலைத் திருக்கோயில்களிலும் பக்தர்கள் மொபைல் போன்களை கோயிலுக்குள் கொண்டு செல்வதற்கு முழுமையாகத் தடை விதிக்கப்படுகிறது. இதற்காக பக்தர்கள் தங்களின் மொபைல் போன்களை பாதுகாப்பாக வைக்க லாக்கர் வசதிகளை அந்தத் தேதிக்குள் உடனடியாக ஏற்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மூன்றாவதாக, கோயில் வளாகத்திற்குள் சுவாமி திருவுருவங்களை புகைப்படம் எடுப்பது, வீடியோ அல்லது ரீல்ஸ் பதிவு செய்வது முற்றிலும் தடை செய்யப்படுகிறது. மேலும் விஐபிக்கள் மற்றும் திரைத்துறை பிரபலங்களுடன் கோயிலுக்குள் ஊடகங்கள் வீடியோவோ புகைப்படமோ எடுக்க அனுமதி அளிக்கக் கூடாது. இனிவரும் காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெற்றதாகச் செய்திகள் வெளியானால், அதற்குப் பொறுப்பான கோயில் அதிகாரிகள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இந்த விதிமுறைகளை எந்தவித விதிவிலக்கும் இன்றி கடுமையாகப் பின்பற்ற வேண்டும் என்றும் அமைச்சர் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
