LATEST NEWS
“திமுகவிடம் நெருக்கம் காட்டும் சீமான்..?” அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் திடீர் திருப்பம்.. தமிழக அரசியலில் தீப்பிடிக்கும் புதிய பரபரப்பு..!!
பீகாரில் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி இடைத்தேர்தலில் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து, தமிழ்நாட்டிலும் அதுபோன்ற அரசியல் மாற்றத்தை உருவாக்க நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திட்டமிட்டு வருகிறார். விரைவில் நடைபெறக்கூடும் என எதிர்பார்க்கப்படும் அம்பாசமுத்திரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலைத் தனது முக்கிய இலக்காகக் கொண்டு அவர் காய்களை நகர்த்தி வருகிறார். ஏற்கனவே இடைத்தேர்தலைச் சந்திக்க ஆர்வமாக இருப்பதாகப் பகிரங்கமாக அறிவித்துள்ள நிலையில், அம்பாசமுத்திரம் தொகுதியில் போட்டியிட சீமான் தீவிர ஆர்வம் காட்டி வருகிறார். அம்பாசமுத்திரத்தில் தனித்துப் போட்டியிட்டு வெற்றி பெறுவது சவாலாக இருக்கும் எனக் கருதப்படுவதால், சில எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் பொது வேட்பாளராகக் களம் இறங்கும் வாய்ப்புகளையும் சீமான் பரிசீலித்து வருகிறார்.
இதன் ஒரு பகுதியாகப் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்களைச் சந்தித்து நட்புறவை வலுப்படுத்தி வருகிறார். அதேவேளையில், திமுக தரப்பைத் தொடர்புகொண்டபோது, தற்போதைக்கு அரசியல் பணிகளைத் தொடர்ந்து செய்யுமாறு பதில் கிடைத்ததாகவும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. கூட்டணி அல்லது போட்டித் தன்மை குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் இதுவரை வெளியாகாத நிலையில், அம்பாசமுத்திரம் தொகுதியில் பூத் வாரியாக நிர்வாகிகளை நியமித்து நாம் தமிழர் கட்சி தேர்தல் பணிகளைத் துரிதப்படுத்தியுள்ளது. மேலும், ஆளுங்கட்சிக்கு எதிராக மக்கள் பிரச்சினைகளை முன்வைத்து போராட்டங்களை நடத்தவும் திட்டமிடப்பட்டு வருகிறது. சீமான் தனித்துப் போட்டியிடுவாரா அல்லது கூட்டணி அமைப்பாரா என்பது குறித்த எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரங்களில் தொடர்ந்து நீடிக்கிறது.
