LATEST NEWS
தவறான ID-க்கு போன பணம்..! ‘நாங்க ஒன்னும் பண்ண முடியாது’..! என கழன்றுகொண்ட UPI.. வைரல் ட்வீட்..!!
ராஜேந்திர பெஹ்ரா என்ற நபர், தனது கைபேசியில் ‘ஃபோன்பே’ செயலி மூலம் அவசரமாகப் பணம் அனுப்ப முயன்றபோது, தட்டச்சு பிழை காரணமாகத் தவறுதலாக வேறொரு நபரின் UPI முகவரிக்கு ரூ.4,500 தொகையை அனுப்பியுள்ளார். தன் பணத்தை மீட்டெடுக்க உதவுமாறு அவர் சமூக ஊடகமான ‘X’ தளம் வழியாக யூபிஐ மற்றும் ஃபோன்பே நிறுவனத்திடம் கோரிக்கை விடுத்தார். ஆனால், யூபிஐ தரப்பில் இருந்து வந்த பதில் இணையத்தில் வைரலாகி, பொதுமக்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட பயனர் கேட்ட உதவிக்கு அதிகாரப்பூர்வ யூபிஐ தளம் அளித்த பதிலில், “உங்கள் சூழ்நிலையை எங்களால் புரிந்து கொள்ள முடிகிறது, ஆனால் தவறாக அனுப்பப்பட்ட பணப் பரிவர்த்தனைகளை எங்கள் தரப்பிலிருந்து நேரடியாகத் திருப்பி அனுப்பும் வசதி இல்லை” என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டது. மேலும், இனிமேல் பணம் அனுப்பும் முன் UPI முகவரியை நன்றாகச் சரிபார்க்குமாறும், இந்தச் சிக்கலைத் தீர்க்க உடனடியாக சம்பந்தப்பட்ட வங்கியை அணுகுமாறும் யூபிஐ நிர்வாகம் அவருக்கு அறிவுறுத்தியுள்ளது. இந்த பொறுப்பற்ற பதிலைக் கண்டு அதிருப்தியடைந்த நெட்டிசன்கள், “இவர்களிடமிருந்து இதைத்தான் எதிர்பார்க்க முடியும்” என்று சமூக வலைத்தளங்களில் விமர்சித்து வருகின்றனர்.
இதேபோன்ற தவறான பணப் பரிவர்த்தனைகள் நடந்தால் உடனடியாக வங்கியின் வாடிக்கையாளர் சேவை மையத்தை அழைத்து புகார் அளித்து, அதற்கான குறிப்பு எண்ணைப் பெற வேண்டும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். மேலும், NPCI அமைப்பின் UPI இணையதளத்திலும் ஆன்லைன் மூலம் புகார் அளிக்கலாம். ஒருவேளை பணம் பெற்றவர் நேர்மையானவராக இருந்தால், அவரிடம் நேரடியாகச் சாட்டிங் மூலம் பேசி பணத்தைத் திரும்பப் பெறலாம்; இல்லையெனில், வங்கியின் மூலம் பணத்தை மீட்டெடுக்க 30 முதல் 40 நாட்கள் வரை ஆகலாம் என்று கூறப்படுகிறது.
