LATEST NEWS
அடக்கொடுமையே…! ஐசியூ-வில் உயிருக்குப் போராடும் நோயாளி… தலையிலேயே சொட்டும் மழைநீர்… மத்தியப் பிரதேச மருத்துவ வசதியின் முகத்திரையைக் கிழித்த வீடியோ..!!
மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்ட அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் மேல்கூரையிலிருந்து மழைநீர் சொட்டும் அதிர்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் பரவி, மாநிலத்தின் மருத்துவ வசதிகள் மற்றும் மருத்துவமனை பராமரிப்பு குறித்த பலத்த கேள்விகளை எழுப்பியுள்ளது. சில மணிநேர தொடர் மழைக்குப் பிறகு, தீவிர சிகிச்சைப் பிரிவின் கூரையிலிருந்து நேரடியாக தண்ணீர் சொட்டத் தொடங்கியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ ஞாயிற்றுக்கிழமை வெளியாகி, சமூக வலைதளவாசிகளின் கடும் கண்டனத்தைப் பெற்றுள்ளது.
இணையத்தில் பரவி வரும் அந்த வீடியோவில், தீவிர சிகிச்சைப் பிரிவில் நோயாளி ஒருவர் படுக்கையில் படுத்திருக்கும்போதே கூரையிலிருந்து சொட்டும் நீரால் அப்படுக்கை நனைந்திருப்பது தெளிவாகத் தெரிகிறது. மேலும், மேலிருந்து சொட்டும் மழைநீரைச் சேகரிப்பதற்காக வார்டுக்குள் ஆங்காங்கே வாளிகள் வைக்கப்பட்டிருப்பதும் காட்சியளிக்கிறது. மிகக் கடுமையான உடல்நலக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டு, பாதுகாப்பான மற்றும் தீவிர கண்காணிப்பு தேவைப்படும் நோயாளிகளுக்கான வார்டிலேயே இந்த அவலநிலை ஏற்பட்டுள்ளது நோயாளிகள், அவர்களது உறவினர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்களுக்குப் பெரும் அசௌகரியத்தையும் பாதிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் மாவட்ட மருத்துவமனை கட்டிடத்தின் பராமரிப்புப் பணிகள் மற்றும் மழைக்காலத்தை எதிர்கொள்ள அதிகாரிகள் மேற்கொண்ட முன்ஏற்பாடுகள் மீதான கேள்விகளை எழுப்பியுள்ளது. அவசர சிகிச்சைப் பிரிவில் நோயாளிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், கசியும் கூரையை உடனடியாக பழுதுபார்க்க வேண்டும் என்றும், வடிகால் அமைப்புகளைச் சீரமைக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்துள்ளன. இச்சம்பவத்தைத் தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகம் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது மற்றும் நிரந்தரத் தீர்வு காண்பார்களா என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
