LATEST NEWS
விதியின் கொடூரம்..! வெள்ள நிவாரணம் வாங்கச் சென்ற 11 வயது சிறுவன்.. தலையில் தேங்காய் விழுந்து பரிதாப மரணம்..!!
ஒடிசா மாநிலம் மயுர்பஞ்ச் மாவட்டத்தின் பாரிபடா பகுதியில், தலையில் தேங்காய் விழுந்ததில் 11 வயது சிறுவன் ஒருவன் பரிதாபமாக உயிரிழந்த சோக சம்பவம் நடந்துள்ளது. உயிரிழந்த சிறுவன் ஐந்தாம் வகுப்பு படித்து வந்த பாதல் பத்ரா என அடையாளம் காணப்பட்டுள்ளார். இப்பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் சிறுவனின் வீடு தண்ணீரில் மூழ்கியதால், பெரும் சிரமத்திற்கு ஆளான தனது குடும்பத்தினருக்காக நிவாரணப் பொருட்களை வாங்க அந்தச் சிறுவன் நிவாரண மையத்திற்குச் சென்றுள்ளான்.
சிறுவன் நிவாரணப் பொருட்களைப் பெற்றுக்கொண்டு தனது வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, வழியில் இருந்த ஒரு மரத்திலிருந்து எதிர்பாராதவிதமாக அவனது தலையில் தேங்காய் விழுந்துள்ளது. இதில் பலத்த காயமடைந்த சிறுவனை அவனது பெற்றோர் உடனடியாக மீட்டு உள்ளூர் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ரங்மாட்டியா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட சிறுவன், அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான்.
ஏற்கனவே வெள்ளப் பாதிப்பினால் வீட்டை இழந்து தவித்த அந்த ஏழைக் குடும்பத்திற்கு, தங்களின் 11 வயது மகனின் இந்த திடீர் மரணம் பேரிடியாக அமைந்து அவர்களை நிலைகுலையச் செய்துள்ளது. இந்தத் துயரச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
