LATEST NEWS
மனைவியுடன் சண்டை… இரயில் முன் குதித்து தற்கொலை முயற்சி… வெளிநாட்டிலிருந்து வந்த இளைஞருக்கு நேர்ந்த கொடூரம்…!!
பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள சாசாமூசா இரயில் நிலையப் பகுதியில் அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. குடும்பத் தகராறு மற்றும் திருமணக் கடன் தொடர்பான மன உளைச்சலால் பாதிக்கப்பட்ட 29 வயது இளைஞர் ஒருவர் இரயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இந்த கொடூர விபத்தில் அவரது இரண்டு கால்களும் துண்டிக்கப்பட்டு, தீவிர ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்டவர் கோபால்பூர் காவல் எல்லைக்கு உட்பட்ட சைல்வா கிராமத்தைச் சேர்ந்த அஜேஷ் ஷா என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் வெளிநாட்டில் வெல்டராகப் பணியாற்றி வந்துள்ளார். தனது திருமணத்திற்காக வாங்கிய கடனை அடைக்க வெளிநாட்டிலிருந்து பணம் அனுப்பியதாகக் கூறும் அஜேஷ், சொந்த ஊருக்குத் திரும்பிய பிறகும் குடும்பத்தினர் மேலும் பணம் கேட்டு நெருக்கடி அளித்ததாகக் குறிப்பிட்டுள்ளார். சம்பவத்தன்று மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் அவர் கடுமையாக அவமானப்படுத்தப்பட்டதால், மன அழுத்தத்திற்கு உள்ளாகி இந்த முடிவை எடுத்ததாகத் தெரிவித்துள்ளார்.
சம்பவம் குறித்து தகவலறிந்த இரயில்வே காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, படுகாயமடைந்த அஜேஷை மீட்டு கோபால்கஞ்ச் சதர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருந்ததால் மேல் சிகிச்சைக்காகத் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், அவரது குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
