LATEST NEWS
“ஐயா காப்பாத்துங்க” 300 கோடி பள்ளிக் கல்வித்துறை ஊழல்… கதவை தட்டிய மாஜி… கதறவிட்ட முதல்வர் விஜய்..பி.டி. அரசு குமார் வாக்குமூலத்தால் திணறும் அந்த புள்ளி..!!
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால், முந்தைய ஆட்சியில் ஊழல் புகாரில் சிக்கிய அமைச்சர்கள் ‘பார்க்க வேண்டியவர்களைப் பார்த்து’ வழக்கிலிருந்து தப்பித்துக் கொள்வதுதான் வழக்கமான அரசியல் பார்முலா. ஆனால், இந்த பார்முலாவைப் பயன்படுத்தி தப்பிக்க நினைத்த முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தற்போது முதலமைச்சர் விஜய் அமைத்துள்ள கெடுபிடிகளால் செய்வதறியாது திகைத்துப்போய் நிற்பதாக விவரமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்தே, கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் நடந்த துறைகளின் ஊழல் விவரங்கள் ஒவ்வொன்றாகத் தூசி தட்டப்பட்டு வருகின்றன. அதிகாரிகளை வைத்து வழக்கிலிருந்து தப்பலாம் என்ற மாஜிகளின் திட்டத்தை உடைக்கும் வகையில், பழைய ஆட்சிக்குச் சாதகமாக இருந்த உயர் அதிகாரிகளை முதலமைச்சர் விஜய் அதிரடியாக மாற்றியுள்ளார். பதவி ஏற்ற ஒரே வாரத்தில் அன்பில் மகேஷ் தரப்பு தொடர்பான முறைகேடு ஆவணங்கள் முதலமைச்சரின் கவனத்திற்குச் சென்றுள்ளன.
இதன் தொடர்ச்சியாக, பள்ளிக் கல்வித்துறையில் இடைத்தரகராகச் செயல்பட்டு வசூல் வேட்டையில் ஈடுபட்ட பி.டி. அரசு குமார் அதிரடியாகக் கைது செய்யப்பட்டார். அதிகாரப்பூர்வமாக 100 கோடி ரூபாய் முறைகேடு என்று கூறப்பட்டாலும், இதன் பின்னணியில் சுமார் 300 கோடி ரூபாய் வரை கையாடல் நடந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. சிறையில் அடைக்கப்பட்டுள்ள அரசு குமாரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், வசூலிக்கப்பட்ட பணம் அன்பில் மகேஷின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனால் அன்பில் மகேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் எந்த நேரத்திலும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்படலாம், கைது செய்யப்படவும் வாய்ப்புள்ளது என்ற பரபரப்பு நிலவுகிறது. இந்தச் சூழலில், முதலமைச்சர் விஜய்க்கு நெருக்கமான ஒருவரைப் புறவாசல் வழியாக அணுகி, ‘அண்டர் டீலிங்’ மூலம் வழக்கில் இருந்து தப்பிக்க அன்பில் மகேஷ் தரப்பு முயற்சி செய்ததாகக் கூறப்படுகிறது.
ஆனால், இந்தத் தகவல் முதலமைச்சர் விஜய்யின் கவனத்திற்குச் சென்றதும், “மக்கள் ஊழலுக்கு எதிராகவே நமக்கு வாக்களித்துள்ளார்கள்; தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தப்ப முடியாது” எனக் கூறி, பரிந்துரைக்க வந்தவருக்கே செக் வைத்துள்ளார். புறவாசல் தூது முற்றிலும் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அடுத்து வரவிருக்கும் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள முடியாமல் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் தரப்பு கடும் அதிர்ச்சியில் உறைந்துள்ளது.
