LATEST NEWS
‘பிறப்புறுப்பு திருட்டு’ சமூக வலைத்தளங்களில் பரவிய வதந்தி… கல்லால் அடித்தும், வீதியில் இழுத்தும் 80-க்கும் மேற்பட்டோர் அடித்துக் கொலை… பொய்யான தகவலால் அரங்கேறிய கொடூரம்..!!
சமூக ஊடகங்கள் மூலமாகப் பரப்பப்படும் தவறான வதந்திகள் எந்தளவுக்கு ஒரு பெரும் வன்முறையாகவும் உயிரிழப்பாகவும் மாறும் என்பதற்கு உதாரணமாக, ஆப்பிரிக்க நாடுகளில் பரவி வரும் “பிறப்புறுப்பு திருட்டு” என்ற விசித்திரமான வதந்தி அமைந்துள்ளது. டிக்டாக் உள்ளிட்ட பல்வேறு சமூக வலைத்தளங்களின் வழியாகப் பரவிய இந்த வினோதமான மற்றும் பொய்யான தகவல் காரணமாக, கடந்த ஓராண்டில் மட்டும் 8 ஆப்பிரிக்க நாடுகளில் 80-க்கும் மேற்பட்ட மக்கள் ஆவேசமடைந்த கும்பலால் அடித்துக் கொடூரமாகக் கொல்லப்பட்டுள்ளதாக பிபிசி செய்தி நிறுவனத்தின் புலனாய்வு அறிக்கை தெரிவிக்கிறது. அக்டோபர் 2025 முதல் 2026 ஜூலை வரையிலான காலகட்டத்திற்குள் இந்த விபரீத மரணங்கள் நேர்ந்துள்ளன.
இந்த வதந்திகளின் பின்னணி குறித்துப் பார்க்கையில், காங்கோ நாட்டில் கடந்த ஆண்டு முதன்முதலாகத் தொடங்கிய இந்த வதந்தி, மிகக் குறுகிய காலத்தில் புருண்டி, ஜாம்பியா, தான்சானியா, அங்கோலா, மலாவி மற்றும் கென்யா உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கும் காட்டுத்தீயாகப் பரவியுள்ளது. யாராவது ஒரு நபர் பிறரைத் தொட்டால் அல்லது கை குலுக்கினால் அவரது பிறப்புறுப்பு மாயமாக மறைந்துவிடுகிறது அல்லது திருடப்பட்டு விடுகிறது என்ற மூடநம்பிக்கையின் அடிப்படையிலேயே இந்தக் கொடூரக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. வதந்திகளை உண்மை என நம்பும் ஆவேசமான பொதுமக்கள், சந்தேகப்படும் நபர்களை வீதிகளில் இழுத்துச் சென்று கல்லால் அடித்தும், கொடூரமாகத் தாக்கியும் கொன்று குவித்து வருகின்றனர்.
இந்த விசித்திரமான வதந்தியால் ஆப்பிரிக்க கண்டத்திலேயே மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடாக மொசாம்பிக் திகழ்கிறது. அங்கு வெறும் 6 வார கால இடைவெளியில் மட்டும் சுமார் 55 பேர் இத்தகைய கும்பல் வன்முறையால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டுப் போலீசார் தெரிவித்துள்ளனர். இதில் கொடுமை என்னவென்றால், கொல்லப்பட்டவர்களில் பொதுமக்களுக்குச் சேவை செய்யச் சென்ற அரசு ஊழியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் ஒரு காவல் அதிகாரியும் அடங்குவர். இந்த விவகாரம் உலகத் தலைவர்களின் கண்டனத்தைப் பெற்றிருந்தாலும், சமூக வலைத்தளங்களின் தவறான பயன்பாட்டால் வன்முறைகள் இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.
