LATEST NEWS
உஷார்..! சூயிங் கம் சாப்பிட்டால் மாரடைப்பு வருமா..? ‘சைலிடால்’ செயற்கை இனிப்பூட்டியால் நேரும் விபரீதம்.. அதிரவைக்கும் மருத்துவ ஆய்வு..!!
சர்க்கரைக்கு மாற்றாகப் பயன்படுத்தப்படும் ‘சைலிடால்’ என்ற செயற்கை இனிப்பூட்டியால் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயம் இருப்பதாக, அமெரிக்கா மற்றும் ஜெர்மனியில் நடத்தப்பட்ட மருத்துவ ஆய்வுகளில் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. டயட் உணவுகள், சர்க்கரையற்ற சூயிங் கம், டூத்-பேஸ்ட், ஜாம், தயிர் மற்றும் ஐஸ்கிரீம்கள் போன்றவற்றில் சைலிடால் பரவலாகச் சேர்க்கப்படுகிறது. ஜெர்மனியின் சாரிடே பல்கலைக்கழக மருத்துவமனை மற்றும் கிளீவ்லேண்ட் கிளினிக் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில், இரத்தத்தில் இந்தச் சைலிடால் அளவு அதிகமாக உள்ளவர்களுக்கு மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் திடீர் மரணம் ஏற்படுவதற்கான வாய்ப்பு 57% வரை அதிகமாக இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
இந்தச் சைலிடால் என்ற சர்க்கரை ஆல்கஹால், இரத்தத்தில் உள்ள பிளேட்லெட்டுகளை ஒன்றுடன் ஒன்று ஒட்டச் செய்து, இரத்தக் கட்டிகள் உருவாவதை எளிதாக்குகிறது என மருத்துவ நிபுணர்கள் விளக்குகின்றனர். இதுவே மாரடைப்பு மற்றும் பக்கவாதத்திற்கு முக்கியக் காரணியாக அமைகிறது. இந்த ஆய்வுகள் சைலிடால் பயன்படுத்துவதற்கும் மாரடைப்பிற்கும் இடையே உள்ள தொடர்பை மட்டுமே உறுதிப்படுத்தியுள்ளன என்றும், இது நேரடியாக பாதிப்பை ஏற்படுத்துகிறதா என்பதை அறிய இன்னும் கூடுதல் ஆராய்ச்சிகள் தேவை என்றும் விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர். எவ்வாறாயினும், குறிப்பாக இதய நோய் மற்றும் நீரிழிவு அபாயம் உள்ளவர்கள், இதுபோன்ற செயற்கை இனிப்பூட்டிகள் அதிகமுள்ள தயாரிப்புகளைப் பயன்படுத்தும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.
