LATEST NEWS
ஐ.நா. அமைதிப்படை மீது குண்டுவீச்சு…! செர்பிய நாட்டு ‘புளூ ஹெல்மெட்’ வீரர் பலி… கொடூரத் தாக்குதலுக்கு இந்திய அரசு கடும் கண்டனம்….!!
லெபனான் நாட்டின் கிழக்கு மண்டலத்திலுள்ள மர்ஜியுன் பகுதியில், ஐக்கிய நாடுகள் சபையின் இடைக்காலப் பாதுகாப்புப் படையில் (UNIFIL) பணியாற்றி வந்த அமைதிப்படையினர் மீது நேற்று முன்தினம் திடீரென குண்டுவீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த அகோரத் தாக்குதலில், செர்பியா நாட்டைச் சேர்ந்த ‘புளூ ஹெல்மெட்’ அமைதிப்படை வீரரான சார்ஜென்ட் மிலோவன் ஜோவனோவிக் என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், ஸ்பெயின் மற்றும் எல் சால்வடார் ஆகிய நாடுகளைச் சேர்ந்த இரண்டு பாதுகாப்பு வீரர்கள் பலத்த காயமடைந்து, தெற்கு லெபனானில் உள்ள ஐ.நா. மருத்துவ முகாமில் அவசரச் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்தத் தாக்குதல் சம்பவத்திற்கு இந்திய அரசாங்கம் தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. இதுதொடர்பாக ஐ.நா. சபைக்கான இந்தியாவின் நிரந்தரத் தூதர் ஹரிஷ் பார்வதனேனி சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில், உலக அமைதிக்காகப் பாடுபடும் வீரர்கள் மீதான அத்துமீறல் ஏற்கத்தக்கதல்ல என்றும், உயிரிழந்த செர்பிய வீரரின் குடும்பத்திற்கு இந்தியாவின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்தத் தாக்குதலுக்குக் காரணமான குற்றவாளிகளை உடனடியாகக் கண்டறிந்து நீதியின் முன் நிறுத்த முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், ஐ.நா. வீரர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும் என்றும் இந்தியத் தூதரகம் வலியுறுத்தியுள்ளது.
