LATEST NEWS
“எங்களை இன்னும் விடுவிக்கல” முதல்வர் கிட்டே இருந்து உத்தரவு வரலன்னு சொல்றாங்க… கைது செய்யப்பட்ட மேயர் பிரியா பரபரப்பு குற்றசாட்டு..!!
தமிழகத்தில் போதைப்பொருள் ஒழிப்பு நாளன்று மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் டி.சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத்துவது போன்ற வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனைக் கண்டித்தும், அவரை உடனடியாகப் பதவியிலிருந்து நீக்க வலியுறுத்தியும், திமுக தலைவரின் உத்தரவின்படி திமுக மாணவர் அணி சார்பில் நேற்று தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் பிரம்மாண்ட கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் திமுக அமைச்சர்கள் மற்றும் சென்னை மேயர் பிரியா உள்ளிட்ட ஆயிரக்கணக்கான நிர்வாகிகள் கலந்துகொண்டு த.வெ.க அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை அனுமதி வழங்காத நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட அமைச்சர்கள், மேயர் பிரியா மற்றும் திமுக மாணவர் அணியினரை போலீஸார் அதிரடியாகக் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் ஆங்காங்கே உள்ள தனியார் திருமண மண்டபங்களில் அடைக்கப்பட்டனர். ஆனால், கைது செய்யப்பட்டு மாலை 7 மணிக்கு மேல் ஆகியும் தங்களை இன்னும் விடுதலை செய்யாமல் காவல்துறை காலம் கடத்தி வருவதாகப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.
இதுகுறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய மேயர் பிரியா, த.வெ.க அரசை கண்டித்து அமைதியான முறையில் நடத்த முயன்ற போராட்டத்தைக் காவல்துறை தடுத்து நிறுத்தியதாகக் கூறினார். மேலும், “அமைச்சர் சரத்குமார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காலையிலிருந்து போராடியும் அரசு எந்த முடிவையும் அறிவிக்கவில்லை. தனியார் மண்டபங்களில் அடைக்கப்பட்டுள்ள பெண்களுக்குக் கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட செய்து தரப்படவில்லை” எனச் சாடினார். முதலமைச்சரிடம் இருந்து இன்னும் உத்தரவு வரவில்லை எனக் கூறி காவல்துறை திட்டமிட்டே தங்களை விடுவிக்காமல் தாமதப்படுத்துவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
