LATEST NEWS
“புத்தகம் கொண்டு வரலனு இப்படியா..! 1-ஆம் வகுப்பு சிறுவனை அடிச்சு பல்லை உடைச்ச டீச்சர்..! அது பால் பல் என சமாளிக்கும் பிரின்சிபால்..! உண்மையில் நடந்தது என்ன..?!”
உத்தரப் பிரதேச மாநிலம் சும்பல் மாவட்டத்தில் உள்ள தேஹ்லி தர்வாஸா பகுதியில் அமைந்துள்ள செயிண்ட் ஜிலானி பப்ளிக் பள்ளியில் இச்சம்பவம் நடந்துள்ளது. ஹயாத்நகர் பகுதியைச் சேர்ந்த முகமது இக்ரார் என்பவரின் மகன் தைமூர் அலி, அங்கு முதலாம் வகுப்பு படித்து வருகிறான். புதன்கிழமை காலையில் பள்ளிக்குச் சென்ற அம்மாணவன், தவறுதலாக ஒரு பாடப் புத்தகத்தை வீட்டில் மறந்து வைத்துவிட்டு வந்துள்ளான். இதனால் ஆத்திரமடைந்த பள்ளி பெண் ஆசிரியர் ஒருவர், சிறுவனின் கன்னத்தில் பலமாக அறைந்துள்ளார். இந்த அறையின் தீவிரத்தினால் சிறுவனின் ஒரு பல் உடைந்து விழுந்ததாகக் கூறப்படுகிறது.
பள்ளி முடிந்ததும் சிறுவன் அழுதபடியே வீட்டிற்கு வந்து நடந்த விவரங்களைக் கூறியதைக் கேட்டு பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் உடனடியாக பள்ளி முதல்வரைத் தொடர்புகொண்டு புகார் அளித்தபோதிலும், பள்ளி நிர்வாகம் சார்பில் எந்த உறுதியான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் அதிருப்தியடைந்த பெற்றோர், சிறுவனை அழைத்துக்கொண்டு நேரடியாக கொத்வாலி காவல் நிலையத்திற்குச் சென்றனர். புகாரைப் பெற்ற காவல்துறை, சிறுவனுக்கு மருத்துவப் பரிசோதனை செய்வதற்காக மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தது. எதிர்காலத்தில் தன் மகனுக்கோ அல்லது மற்ற குழந்தைகளுக்கோ இதுபோன்ற அசம்பாவிதம் ஏற்படாதவாறு ஆசிரியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிறுவனின் தந்தை கோரிக்கை விடுத்துள்ளார்.
இவ்விவகாரம் குறித்துப் பேசிய கொத்வாலி காவல் ஆய்வாளர் சுதீர் பவார், தற்போது இரு தரப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், முறையான புகார் எதுவும் நிலுவையில் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். மற்றொருபுறம், செயிண்ட் ஜிலானி பப்ளிக் பள்ளியின் முதல்வர் தாரிக் அலி இக்க குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக மறுத்துள்ளார். பள்ளியில் உள்ள சிசிடிவி (CCTV) காட்சிகளை ஆய்வு செய்ததாகவும், அதில் ஆசிரியர் தாக்கியதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், சிறுவன் சிறிய குழந்தை என்பதால் அவனுக்கு இயல்பாகவே பால் பல் உதிர்ந்து விழுந்துள்ளதாகவும் பள்ளி நிர்வாகத்தின் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
