CINEMA
“எம்ஜிஆர், ஜெயலலிதா வரிசையில் விஜய்…!”சினிமால மட்டும் இல்ல நிஜத்துலயும் அவர் ‘ஆக்ஷன் ஹீரோ’ தான்…!தமிழ்நாட்டில் நடக்கும் அதிரடி மாற்றங்கள்…!”ஆர்.வி. உதயகுமார் ஓபன் டாக்…!”
தமிழ்நாட்டின் முதலமைச்சராக நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான ஜோசப் விஜய் பதவியேற்றதில் இருந்து, அவரது அரசியல் நகர்வுகளையும் மக்கள் நலத்திட்டங்களையும் திரையுலகைச் சேர்ந்த பலரும் தொடர்ந்து பாராட்டி வருகிறார்கள். தமிழ்நாட்டு அரசியலை கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாகத் திராவிட அரசியல் தான் தீர்மானித்து வருகிறது என்றாலும், தமிழகத்தை ஆண்ட பெரும்பாலான முதலமைச்சர்களுக்குத் திரைத்துறையுடன் ஏதோ ஒரு வகையில் நெருங்கிய தொடர்பு இருந்து கொண்டே இருக்கிறது. அந்தத் தொடர்ச்சி தற்போது முதலமைச்சர் விஜய் மூலமும் நீடிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக அரசியல் வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால், பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி ஜெயலலிதா, மு.க. ஸ்டாலின் எனப் பலரும் தமிழ் சினிமாவில் தங்களது ஆளுமையைச் செலுத்தியவர்கள் தான். இவர்களுக்கு மத்தியில் சினிமா பின்னணி இல்லாத திராவிடக் கட்சி முதலமைச்சர்கள் என்றால், அது அதிமுக சார்பில் பதவி வகித்த ஓ. பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி கே. பழனிசாமி ஆகிய இருவர் மட்டும்தான். தற்போது அந்த வரிசையில் சினிமாத்துறையில் இருந்து வந்து முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய்க்கு, தென்னிந்திய நடிகர் சங்கம் உட்படப் பல திரையுலகினர் நேரில் சென்று தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், அதிமுக ஆதரவாளரும் தமிழ் சினிமாவின் மூத்த இயக்குநருமான ஆர்.வி. உதயகுமார் சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, முதலமைச்சர் விஜய்யின் ஆரம்பகால அதிரடி நடவடிக்கைகளைப் வெகுவாகப் பாராட்டியுள்ளார். ‘சின்னக் கவுண்டர்’, ‘எஜமான்’ போன்ற பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய ஆர்.வி. உதயகுமார் பேசுகையில், “விஜய் முதலமைச்சராகப் பதவியேற்றதில் இருந்தே மிகவும் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார். அவர் பொறுப்புக்கு வந்தவுடனேயே, பெரிய பெரிய தொழில் நிறுவனத் தலைவர்களை நேரில் சந்தித்துப் பேசியது பாராட்டுக்குரியது” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “மக்களுக்குப் பாதகமாக, தேவையற்ற இடங்களில் இருந்த மதுபானக் கடைகளை மூட அவர் உத்தரவிட்டுள்ளதும், ஏழை எளிய மக்களின் பசியைப் போக்கும் ‘அம்மா உணவகங்களை’ மீண்டும் முழு வீச்சில் செயல்படுத்த ஆணையிட்டுள்ளதும் இவற்றை எல்லாம் பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாகவும் நம்பிக்கையாகவும் உள்ளது. சினிமாவில் மட்டுமல்லாமல் நிஜ அரசியலிலும் தான் ஒரு ‘ஆக்ஷன் ஹீரோ’ என்பதை விஜய் இதன் மூலம் நிரூபித்துவிட்டார்” என்று இயக்குநர் ஆர்.வி. உதயகுமார் நெகிழ்ச்சியுடன் பாராட்டிப் பேசியுள்ளார்.
