LATEST NEWS
“இது தமிழக இளைஞர்களுக்கு செய்யும் துரோகம்..!” தவெக அரசை கிழித்து தொங்க விட்ட சீமான்.. பரபரக்கும் அரசியல் களம்..!!
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக்கழக நடத்துநர்பணிகளை உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனம் மூலம் ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். வேலையில்லாமல் தவிக்கும் தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்காமல், வெளிமாநில நிறுவனத்திற்கு இந்த உரிமையை வழங்குவது உள்ளூர் இளைஞர்களுக்குச் செய்யப்படும் பெருந்துரோகம் என்று அவர் சாடியுள்ளார். மேலும், உடனடியாக இந்தத் திட்டத்தைக் கைவிட்டு, முழுமையாகத் தமிழக இளைஞர்களைக் கொண்டே காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அரசுப் பேருந்துகளில் தமிழ்மொழி தெரியாத வடமாநிலத்தவர்களைப் பணியமர்த்தினால், மொழி புரியாமல் தமிழக மக்கள் பெரும் அவதிக்குள்ளாக நேரிடும் என்று சீமான் எச்சரித்துள்ளார். பயணிகளிடம் சுமுகமாக உரையாட வேண்டிய நடத்துநர் பணிக்கு தமிழ் மொழி அறிவு மிகவும் அவசியமானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே, தமிழக அரசு இந்த சர்ச்சைக்குரிய உத்தரவைத் திரும்பப் பெற வேண்டும் என்றும், சொந்த மாநில இளைஞர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
