LATEST NEWS
“நாட்டின் பாதுகாப்பைத் தீர்மானித்த கைகள்…” காவல் தலைமையகத்திலேயே முடிந்த கொடூரம்..! மர்ம மரணத்தின்பின்னணி என்ன..?!
திரிபுரா மாநில காவல்துறை தலைமை இயக்குநர் அனுராக் தன்கர், அகர்தலாவில் உள்ள மாநில காவல்துறை தலைமையக அலுவலகத்தில் துப்பாக்கிக் காயத்துடன் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் தனது சேவைத் துப்பாக்கியைப் பயன்படுத்தி தற்கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் போலீசார் முதற்கட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளனர். உடனடியாக அவர் அகர்தலாவில் உள்ள ஜி.பி. பந்த் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும், தீவிர சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
அனுராக் தன்கர் 1994-ஆம் ஆண்டு திரிபுரா கேடரைச் சேர்ந்த இந்திய காவல் பணி அதிகாரியாவார். மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ மற்றும் மாநில உளவுத்துறை உள்ளிட்ட பல முக்கிய துறைகளில் பணியாற்றிய அனுபவம் பெற்ற இவர், 2025-ஆம் ஆண்டில் திரிபுரா டிஜிபியாகப் பொறுப்பேற்றார். அறிவியல் பூர்வமான குற்ற விசாரணை மற்றும் தடயவியல் ஆய்வுகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி வந்த ஒரு மூத்த அதிகாரியின் இந்தத் திடீர் மறைவு காவல் துறை அமைப்பிற்கே பெரும் இழப்பாகக் கருதப்படுகிறது.
இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்ததும் மாநில அரசும் மூத்த அதிகாரிகளும் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனர். தடயவியல் நிபுணர்கள் சிசிடிவி காட்சிகள், ஆயுதம் உள்ளிட்ட ஆதாரங்களைச் சேகரித்து அனைத்துக் கோணங்களிலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேதப் பரிசோதனை மற்றும் தடயவியல் ஆய்வு அறிக்கைகள் வந்த பிறகே மரணத்திற்கான துல்லியமான காரணம் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது.
